தெரிந்திருக்குமா, அதனால் தான் இயல்பாக இருக்கிறாரா... ஜனனி மீது அதிக அக்கறை கொண்டவராற்றே... அப்படி என்றால் யார் சொல்லியிருப்பார்கள் என்று கேள்வி எழ தீவிர யோசனையில் அவளுக்கு ஞாபகம் வந்தது.
ஜனனி சந்தியா இருவரும் சேர்ந்து பிரபோஸரை சந்தித்தது நினைவுக்கு வந்தது. அவர்தான் நியூஸ் பேப்பரில் விளம்பரம் பார்த்ததாகச் சொல்லி அட்ரஸ் கொடுத்தார். அதோடு சென்னையில் ஒரு வீடு வாங்கவும் ஜனனிக்கு உதவி செய்தார்.
அப்பொழுது இதெல்லாம் எதேச்சையாக நடக்கிறது என்று தோன்றியது. ஆனால் இப்போது யோசித்துப் பார்க்கும்போது திட்டம் போட்டு செய்தது போல இருந்தது. எது எப்படியோ... முதலில் சென்னைக்கு போய் ஜனனியை நேரில் சந்தித்தால் தான் நிம்மதியாக இருக்கும் என்று யோசித்தவள் வீட்டை வந்தடைந்தாள்.
அம்மா... நான் சென்னைக்கு போகிறேன் என்று சொல்லிக்கொண்டே உள்ளே வர, வா சந்தியா... நீ சென்னை கிளம்புவதற்கு தேவையான எல்லாவற்றையும் நான் தயாராக எடுத்து வைத்துவிட்டேன். நீ கிளம்ப வேண்டியது மட்டும் தான் பாக்கி... இன்னும் சிறிது நேரத்தில் உனது அப்பா வந்துவிடுவார். நீ செல்வதற்காக ஏற்கனவே கேப் புக் செய்தாயிற்று... அப்பாவும் உன்னுடன் தூத்துக்குடி வரை வந்து உன்னை விமானம் ஏற்றி விட்டு வருவார். நீ சீக்கிரமாக தயாராகு... என்று சொல்ல சந்தியாவிற்கு வியப்பாக இருந்தது. அடுத்த எட்டு நிமிடத்தில் தயாராகி வெளியே வந்தவள் வாசலைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
சில மணி நேரம் கழித்து...
விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த சந்தியா ஜனனி கொடுத்த அட்ரஸை திருப்பிப் பார்த்தாள். இது ஜன்னி வாங்கிய வீட்டின் அட்ரஸ் இல்லை. அப்படி என்னதான் நடந்திருக்கும் என்று அலுத்துக்கொண்டவள் நேரில் சென்று பார்க்கலாம் என்ற முடிவோடு அட்ரஸை கண்டு பிடித்து வந்து இறங்கினாள்.
அந்த வீட்டின் அமைப்பே நாங்க எல்லாம் பெரிய ஆளுங்க என்று வரிந்து கொண்டு நிற்பது போல தோன்றியது. வீட்டிற்கு உள்ளே சென்று காலிங் பெல்லை அழுத்திவிட்டு காத்து நின்றாள். யார் வந்து திறப்பார்கள் என்று யோசித்துக்கொண்டு நின்ற சந்தியாவிற்கு கதவு திறக்கும் சப்தம் கேட்க தலையை திருப்பி பார்த்தாள். அங்கே ஜனனி நின்று கொண்டிருந்தாள். அவள் முகத்தை உற்று நோக்கினாள் சந்தியா.
சந்தியா என்ன பார்க்க... உள்ளே வா என்று சொல்லிக்கொண்டே முன்னால் நடந்த ஜனனியிடம் ஆறு வித்தியாசம் இருக்குமா இல்லை... அறுபது வித்தியாசம் இருக்குமா என்று நினைத்துக்கொண்டே வந்தேன். இங்கே வந்து பார்த்தால் ஒரு வித்தியாசமும் இல்லை என்றாள் சந்தியா.