அவர்கள் அனைவருக்குமே மைத்திக்கு கிரிக்கெட் எத்தனை உயிரானது என்பது தெரியும்... அதையே அவள் குடும்பத்திற்காக வேண்டாம் என்று சொல்லுவதை பெருமையுடன் பார்த்தார்கள்....
“இங்க பாருடி மைத்தி.... அம்மாவும், அப்பாவும் உங்களுக்காகத்தான் இருக்கோம்... நீங்க சந்தோஷமா இருக்க எந்த கஷ்டமும் படுவோம்... உங்களுக்காக பண்ணும்போது அது கஷ்டமா கூட தெரியாது.... அதனால நீ இதையெல்லாம் மனசுல ஏத்திக்காம ஒழுங்கா கோச்சிங் போற வழியை பாரு... பணத்துக்கு நான் ஏதானும் ஏற்பாடு பண்ணறேன்.... கண்ணன் சார் நீங்க மைத்தி திரும்ப வருவான்னு பாஸ்கர் சார்கிட்ட சொல்லிடுங்கோ....”, சியாமளா கூற அவளின் அண்ணனும் தான் வந்து பாஸ்கரை சந்தித்து பேசுவதாக சொன்னார்...
“மைத்தி நீயும் எனக்கு துளசி மாதிரிதான்... பணத்தை பத்தி கவலைப்படாத... உனக்கு பணம் நான் கட்டறேன்.... மேடம் நீங்க பணத்தை பத்தி யோசிக்காதீங்க... எனக்கு மைத்தி பொண்ணு மாதிரிதான்... அதனால அவளுக்கு நான் கட்டறேன்...”
“கண்ணன் சார் நீங்க சொன்னதே நேக்கு அத்தனை சந்தோஷமா இருக்கு.... நாங்களே முடிஞ்சவரை முயர்ச்சிக்கறோம் சார்... முடியாத பட்சத்தில் உங்ககிட்ட கண்டிப்பா கேக்கறோம்....”, சுப்பிரமணியம் தாத்தா சொல்ல கண்ணன் அவர்களிடம் விடைபெற்று சென்றார்....
“ஏண்டி குட்டி நாங்க இத்தனை பேர் இருக்கோம்... அப்படியா உங்களை விட்டுடுவோம்... இப்படி போய் பாஸ்கர் சார்கிட்ட சொல்லி இருக்கியே... தாத்தா, மாமாவெல்லாம் எதுக்கு இருக்கோம் சொல்லு....”
அதை
“உங்களுக்கும் கஷ்டம்தானே தாத்தா... அம்மா, அப்பாக்கு எப்படி கூடுதலா எந்த செலவும் பண்ண முடியாதோ அதே மாதிரிதானே மாமாக்குலாமும்... அதனாலதான் கோச்சிங் வேண்டாம்ன்னு நினைச்சேன்....”
“மைத்திம்மா சில பேருக்குத்தான் பகவான் விசேஷ திறமைகளை கொடுப்பார்... அவர் கொடுக்கறதை நாம வீணாக்கக்கூடாது.... நாங்க இத்தனை பேர் இருக்கோம்... உனக்கு இப்போ வருஷத்துக்கு பத்தாயிரம் ரூபாய் ஆறது... நானும், காமேஷும் இந்த மாசத்துல இருந்து இன்ஸ்டிடியூட்ல வேலைக்கு போகலாம்ன்னு இருக்கோம்... அதுல வர சம்பளம் உனக்குத்தான்.... மீதிக்கு என்ன பண்ணன்னு யோசிக்கலாம்...”
இவர்கள் பேசுவதை கேட்டபடியே வந்த காமாட்சி பாட்டி என்ன விஷயம் என்று கேட்க கற்பகம் பாட்டி அங்கு நடந்ததை சொன்னார்...