குடுத்திருக்கே...அதிலேயே அவனுக்குத் தேவையான எல்லா விபரங்களும் கிடைச்சிடும்!...அதுக்கப்புறம் அவன் எதுக்கு இதைப் படிக்கப் போறான்?...ஹும்...எப்படியும் நீ சொதப்புவே!ன்னு எனக்குத் தெரியும்...ஆனா...இந்த மாதிரியெல்லாம் கிறுக்குத்தனமாய்ச் சொதப்புவே!ன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கலைடி!...பேசாம நீ ஒதுங்கி...என்னை மூவ் பண்ணிக்கச் சொல்லியிருந்தேன்னா இன்னேரம் நான்...கன கச்சிதமா காதலை சக்சஸ் பண்ணியிருப்பேன்” என்றாள் பரிமளா.
“அப்படின்னா?...இப்பவும் உன் மனசுல அந்த ரவீந்தர் இருக்கான்!...அப்படித்தானே?” கோபமாய்க் கேட்டாள் காவ்யா.
“அய்யய்யோ!...அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைடி!...ஒரு சந்தர்ப்பத்துல...அதாவது...நீ அவனைக் காதலிக்கறேன்!னு சொல்றதுக்கு முன்னாடி என் மனசுல அப்படியொரு எண்ணம் இருந்திச்சு...அப்புறம் நீ உன் மனதை திறந்து கட்டின பிறகு அது காத்தோட போயிடுச்சு”
அப்போது அவர்கள் ஏற வேண்டிய பேருந்து வந்ததும், இருவரும் ஓடிப் போய் ஏறிக் கொண்டனர்.
பஸ்ஸில் வழக்கத்தை விட கூட்டம் சற்றுக் குறைவாகவேயிருந்தது. பரிமளா பாய்ந்து சென்று தனக்கும், காவியாவிற்கும் இடம் பிடித்தாள். நிதானமாகச் சென்ற காவ்யா அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.
கண்டக்டர் வந்து டிக்கெட் கொடுத்து விட்டு நகர்ந்த பின், பரிமளாவைச் சுரண்டினாள் காவ்யா. ‘என்னடி?..ஏண்டி சுரண்டறே?”
“அங்க பாரு...நம்ம சீட்டுக்கு ரெண்டு சீட்டு முன்னாடி யாரு?ன்னு பாரு?” சன்னக் குரலில் சொன்னாள் காவ்யா.
“யாரூ?” கேட்டபடியே தலையைச் சாய்த்துப் பார்த்தாள்.
யாரோ ஒரு இளைஞன் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
“யாருடி?...தெரிஞ்சவரா?” பரிமளா கேட்க,
“அடிப்பாவி...உன் கண் என்ன குருடா?” கோபமாய்க் கேட்டாள் காவ்யா. அவள் அப்படிக் கேட்டதும், மறுபடியும் உற்றுப் பார்த்து விட்டு, “யாருடி?...எனக்கு அடையாளம் தெரியலியே?” என்றாள் பரிமளா.
“அந்த ரவீந்தர்தாண்டி...அங்க உட்கார்ந்திட்டிருக்கான்” என்றாள் காவ்யா.
திரும்பி அவளை ஒரு முறை முறைத்து விட்டு, “ம்ஹும்...உனக்கு ரவீந்தர் பைத்தியம் பிடிச்சிட்டுது...அதான் பார்க்கற ஆம்பளைகளையெல்லாம் ரவீந்தர்...ரவீந்தர்!ன்னு சொல்றே” என்றாள் பரிமளா.
“எனக்கு பைத்தியம் இல்லை...உனக்குத்தான் கண்ணு குருடாயிடுச்சு”
பேருந்து ஒரு ஸ்டாப்பிங்கில் நிற்க, அந்த இளைஞம் இறங்குவதற்காக எழுந்தான்.