தொடர்கதை - லாக் டவுன் – 01 - ஜெய்
Hello Friends,
இதோ அடுத்த கதையுடன் வந்துவிட்டேன்.... Lockdown உலகத்திலுள்ள அத்தனை மொழிகளிலும் பிடிக்காத, இனி ஏழேழு ஜென்மத்திகும் கேட்க விரும்பாத வார்த்தை என்று ஒவ்வொருவரும் புலம்பும் அளவிற்கு இந்த கொரோனா நம் அனைவரையும் வைத்து செய்து கொண்டிருக்கிறது... கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரையில், சாதி, மத, இன, மொழி பேதமின்றி அனைவரையும் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது... ஹீரோவா, வில்லனா என்று கணிக்க முடியாத கண்ணிற்கு தெரியாத இந்த நோயே நம் கதையின் கரு... இதனால் மக்களின் வாழ்வு எப்படி மாறியுள்ளது என்பதை வைத்து எழுதப்போகிறேன்... அறிந்தவர்க்கும், தெரிந்தவர்க்கும் உண்மையில் நடந்த சம்பவங்களை என் கற்பனை கலந்து படைக்க உள்ளேன்... வாருங்கள் lockdown உலகிற்குள் செல்வோம்...
“தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி
தேவி கருமாரி துணை நீயே மகமாயி
தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி....”... பக்கத்து வீட்டில் பாடல் ஒலிக்க அதை ரசித்தபடியே வாசலில் கோலமிட்டுக்கொண்டிருந்தாள் திவ்யா.... இன்னும் ஆறு வாரங்களில் திருமணம் ஆகப்போகும் பெண்...
கல்லூரிப் பருவத்தில் ஆரம்பித்த காதல் பல தடைகளைத் தாண்டி திருமண நிச்சயத்தில் வந்து நிற்கிறது... என்னதான் காதல் திருமணம் என்றாலும் குமாரின் தாயார் நகை, வரதட்சனை என்று ஏகப்பட்ட கெடுபிடிகளுடனே திருமணத்திற்கு சம்மதத்திருந்தார்.... ஜூன் மாதம் திருமணம்...
கோலமிட்டு உள்சென்ற திவ்யா சமையலறை சென்று தன் தாய்க்கு உதவ ஆரம்பித்தாள்...
“அம்மா என்ன காய் நறுக்க... ரம்யா இன்னும் எழும்பலையா....”
“அவளுக்குதான் காலேஜ் இல்லையே... அதான் மெதுவா எழும்புவா... இன்னைக்கு சாம்பாரும், உருளை காயும்தான் திவ்யா... அதனால எதுவும் நறுக்க வேண்டாம்... உன்னோட கம்பெனி எப்போ திறக்குதாம் திவ்யா.... எதாச்சும் தெரிஞ்சுதா...”
“எங்கம்மா இப்போதைக்கு எதுவும் திறக்காது போல... இப்போவே மே ஆகிடுச்சு... இன்னும் ஒரு மாசம்... அப்பறம் அங்க போய்ட்டா வேற வேலைதான் தேடணும்மா.... தெனைக்கும் அங்கிருந்து வந்து போக முடியாது....”
“அதுவும் சரிதான்... ஏண்டி குமார் வேலைக்கு போறாரா.... இல்லை அவரும் வீட்டுலதானா...”