தொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 05 - முகில் தினகரன்
காலை பத்தரை மணி வாக்கில் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இறங்கிய ரவீந்தர் நண்பன் சுதாகருக்கு கால் செய்தான்.
“ஜனனீ...ஜனனீ...ஜகம் நீ!...அகம் நீ!...ஜகத்காரணி நீ...பரிபூரணி நீ” என்ற பாடல் ரிங் டோனாய் ஒலித்தது.
“அடேங்கப்பா...பயல் பக்தி மானாய் ஆயிட்டான் போலிருக்கே?” என்று ரவீந்தர் நின்னைக்கும் போதே எதிர்முனையில், “ஹலோ...சுதாகர் ஜி பேசறேன்” என்ற குரல் வர,
“சுதாகர் ஜி...நான் ரவீந்தர்!...வந்திட்டேன்...இங்க...பஸ் ஸ்டாண்டுல இருக்கேன்”
“ஒண்ணு செய்!...ஒரு ஆட்டோ பிடிச்சு...“சமத்தூர் பிரிவு...உப்பாயம்மன் கோயில்”ன்னு சொல்லி அங்க இறங்கு!” என்றான் சுதாகர்.
“சரி...அங்க இறங்கி?” மேலும் கேள்வி கேட்டான் ரவீந்தர்.
“நீ அங்க வந்து இறங்கு...நான் அங்கியே நிற்பேன்” என்றான் சுதாகர்.
“ஓ.கே..” என்ற ரவீந்தர் கையில் ஒரு சூட்கேஸையும், தோளில் ஒரு பேக்கையும் சுமந்து கொண்டு ஆட்டோ ஸ்டாண்ட் நோக்கி நடந்தான்.
“எங்க சார் போகணும்?” ஆட்டோக்காரன் கேட்க,
“சமத்தூர் பிரிவுல...உப்பாயம்மன் கோயில்”
“ஏறுங்க சார்”
“இருபத்திஐந்து நிமிட ஓட்டத்திற்குப் பின் அந்த ஆட்டோ ஒரு கோவிலுக்குப் பக்கத்தில் நின்றது. “இதுதான் சார் உப்பாயம்மன் கோயில்” என்று ஆட்டோ டிரைவர் சொன்னதும், பெட்டியையும் பேக்கையும் தூக்கிக் கொண்டு கீழே இறங்கிய ரவீந்தர் ஆட்டோக்காரனுக்கு வாடகையைக் கொடுத்து அனுப்பினான்.
ஆட்டோ சென்றதும் இரண்டு பக்கமும் திரும்பித் திரும்பிப் பார்த்தான். “சுதாகர்...இங்கதானே நிற்கிறேன்!னு சொன்னான்”
அப்போது அந்த கோயிலுக்குள்ளிருந்து ஒரு குருக்கள் வெளி வர, “சரி...அவர் கிட்டே போய் விசாரிப்போம்”என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு, அவரை நோக்கி நடந்தான் ரவீந்தர்.
அருகில் சென்றதும் அந்த குருக்களை நிதானமாய் ஆராய்ந்தது அவன் பார்வை. இளம் வயது, “கரு..கரு” மீசை...தாடி, சட்டையில்லாத மேலுடம்பு, நெற்றியில் “பளிச்”சென்று தெரியும் விதத்தில் பூசப்பட்டிருந்த திருநீர்ப் பட்டை, நெஞ்சு...கை...கால்...என எல்லா இடங்களிலும் விபூதிக் கோடுகள், மேனியிலிருந்து வீசும் ஒரு மங்கல வாடை. கண்களில் தெய்வீக ஒளி...சற்று சோபையாக.
“சாமி...இங்க...சுதாகர்...ன்னு ஒருத்தர்?” ரவீந்தர் கேட்க,