“இவன்தான் நான் சொன்ன ரவீந்தர்!...கோயமுத்தூர்ல...“ஜூபிடர் எண்டர்பிரைசஸ்” கம்பெனில மார்க்கெட்டிங் மேனேஜராய் இருந்தவனுக்கு இப்ப பொள்ளாச்சி பிரான்ஞ்சுக்கு டிரான்ஸ்பர் ஆயிடுச்சு...”சுதாகர்ஜி சொல்ல,
“அப்ப...சார் இனிமேல் நம்ம ஊர்க்காரர்” சொல்லி விட்டுக் கஸ்தூரி அய்யா வாய் விட்டுச் சிரித்தார்.
சுதாகர்ஜியும் பதிலுக்குச் சிரித்து விட்டு, “அய்யா....இவன் என் கூட காலேஜ்ல ஒண்ணாப் படிச்சவன்!...நான் பாதில படிப்பை விட்டுட்டு வந்திட்டதால்...அதுக்குப் பிறகு எங்களுக்குள் தொடர்பு இல்லாமலேயே போயிடுச்சு!...இப்ப பொள்ளாச்சி டிரான்ஸ்பர் என்றதும் இவனுக்கு என் ஞாபகம் வந்திருக்கு...உடனே பழைய நண்பர்கள் கிட்டப் பேசி...எப்படியோ என் நெம்பரைக் கண்டுபிடிச்சு...பேசினான்...!”என்று சொல்லி விட்டு, “கஸ்தூரி அய்யா...பார்த்தா ஆள் கொஞ்சம் கரடுமுரடா இருந்தாலும்...குணத்துல தங்கம்!...அதனால நீங்க தைரியமாய் நீங்க இவனைக் குடி வைக்கலாம்....இவனுக்கு நான் கேரண்டி” என்றார்.
“என்ன சாமி?..நீங்க கூட்டிட்டு வந்து விடறீங்க...அப்ப அவர் நல்லவராத்தானே இருப்பார்?” என்றார் கஸ்தூரி அய்யா.
அவர்களிருவரும் பேசிக் கொண்டிருக்க, பார்வையால் அந்த வீட்டை ஆராய்ந்தான் ரவீந்தர். சிறிய வீடாயிருந்த போதிலும் மிகவும் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுவரில் ஆங்காங்கே ஓவியங்கள் பிரேமிட்டு மாட்டப்பட்டிருந்தன. எல்லாமே மாடர்ன் ஆர்ட் என்று சொல்லப்படும் இன்னதென்று புரிபடாத ரகம்.
நான்கு பக்க சுவர்களையும் அங்குலம் அங்குலமாய் கண்களால் அளந்து கொண்டே வந்த ரவீந்தர் மணக் கோலத்தில் அந்த வத்சலா ஒரு அழகான இளைஞனோடு நின்றிருக்கும் போட்டோவைப் பார்த்ததும் பத்து மில்லிகிராம் அளவிற்கு சோகம் வாங்கிக் கொண்டான். “ஹூம்ம்ம்ம்” பெருமூச்சொன்று அவனைக் கேட்காமலேயே வெளியேறியது.
அடுத்தடுத்த போட்டோக்களை நிதானமாய்ப் பார்த்துக் கொண்டே நகர்ந்த அவன் கண்கள் கடைசியாய் வைக்கப்பட்டிருந்த அந்தப் போட்டோவைப் பார்த்ததும், பத்து டன் சோகத்தை அப்படியே வாங்கி கொண்டன.
மணக்கோலத்தில் வத்சலாவின் அருகில் நின்றிருந்த அந்த இளைஞன் மாலையிடப்பட்ட போட்டோவில் நெற்றிப் பொட்டுடன் சிரித்துக் கொண்டிருந்தான். “அப்படியானால்...அந்தப் பெண் விதவையா?” மனம் நொந்தன் ரவீந்தர்.
தொடரும்...
Next episode will be published on 1st Jan. This series is updated weekly on Fridays.