“அப்படியா?” என்றபடி சுதாகர் சுவாமிகள் யோசிக்க,
“சொல்லுங்கள் ஸ்வாமி...அப்பா கிட்ட என்ன சொல்லணும்?” மீண்டும் மயிலிறகு குரல்.
“ஒண்ணுமில்லை...அந்தப் போர்ஷனை இவருக்கு வாடகைக்கு விட அப்பா ஒத்துக்கிட்டார்!...அதான் வீட்டைக் காட்ட இவரைக் கூட்டிட்டு வந்தேன்!...அதனால பரவாயில்லை குழந்தாய்...நாங்க அப்பா வரும் வரைக்கும் இங்கே உட்கார்ந்து வெய்ட் பண்றோமே?”
“அதனால் ஒண்ணும் பிரச்சினையில்ல ஸ்வாமி!....நானே சாவியை எடுத்துத் தர்றேன்...நீங்க பாருங்க” என்றபடி திரும்பி வீட்டிற்குள் நடந்தவள் இரண்டே நிமிடத்தில் திரும்பி வந்தாள்.
“இந்தாங்க குருக்களய்யா” அவள் சாவியை நீட்ட, சுதாகர்ஜி பெற்றுக் கொண்டார்.
இருவரும் அந்தப் போர்ஷனை நோக்கி நடந்து, கதவைத் திறந்து உள்ளே சென்றதும் ரவீந்தர் கேட்டான், “அந்தப் பொண்ணு....?”
“ஹவுஸ் ஓனர்...கஸ்தூரி சாரோட ஒரே பொண்ணு!...உலகத்தின் சோகங்கள், துயரங்கள், வேதனைகள், கவலைகள்...எல்லாத்தையும் தானே மொத்தக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு புன்னகையோடு வாழ்பவள்!...அவள் கதை...கல் நெஞ்சக்காரன் கண்களிலும் கண்ணீரை வரவழைத்து விடும்!”. என்றார் சுதாகர் சுவாமிகள்.
“என்ன சாமி சொல்றே?” ஆர்வமாய் ரவீந்தர் கேட்க,
“அப்பா..ரவீந்தர்...மொதல்ல வீட்டைப் பாரு...பிடிச்சிருக்கா சொல்லு!...அப்புறமா மத்த கதைகளைப் பேசுவோம்” சுதாகர்ஜி ஒரு சிறிய கோபத்தோடு சொன்னார்.
தன் செயலுக்காய் நாக்கைக் கடித்துக் கொண்டு, “ஓ.கே...ஓ.கே.” என்றபடி ஒவ்வொரு அறையாய்ச் சென்று பார்த்தான் ரவீந்தர்.
“என்னப்பா...வீடு பிடிச்சிருக்கா?” சுதாகர்ஜி கேட்டார்.
“ம்...பிடிச்சிருக்கு” என்றான் ரவீந்தர். அவன் வாய் பதில் பேசினாலும், அவன் மனம் இன்னும் அந்தப் பெண்ணையே நினைத்துக் கொண்டிருந்தது.
அப்போது கதவருகே வந்து நின்ற சிறுவன், “சாமீ...தாத்தா வந்திட்டார்” என்று சொல்லி விட்டு வந்த வேகத்திலேயே திரும்பி ஓடினான்.
“வாப்பா..கஸ்தூரி அய்யாவைப் பார்த்துப் பேசிட்டு வருவோம்” சொல்லியபடியே சுதாகர்ஜி முன்னே நடக்க, பின் தொடர்ந்தான் ரவீந்தர்.
“வாங்க ஸ்வாமி!..உட்காருங்க” என்று பணிவான முக மலர்ச்சியோடு சுதாகரை வரவேற்று கூடத்து நாற்காலியில் அமரச் சொன்னார் அந்த கஸ்தூரி அய்யா. உடன் வந்த ரவீந்தர் உட்காராமல் நின்று கொண்டேயிருக்க, “தம்பி...நீங்களும் உட்காருங்க” என்று கஸ்தூரி அய்யா சொன்னதும், “தேங்க் யூ” என்றபடி தானும் அமர்ந்தான் ரவீந்தர்.