தெருவ வேற அடைச்சு வச்சுட்டாங்க... இல்லைன்னா உன்னையாச்சும் பார்க்க வருவேன்....”
“ஹ்ம்ம் எனக்கு கூட உங்களை பார்க்காம கஷ்டமா இருக்குதுங்க... எப்போதான் தெருவை திறந்து விடுவாங்களாம்....”
“குறைஞ்சது ரெண்டு வாரம் சொல்றாங்க சாந்தி... இப்போதான் நாலு நாள் ஆயிருக்குது... இன்னும் பத்து நாளாச்சும் ஆவும்....”
“உங்க வேலை என்னங்க ஆச்சு... முதலாளி எதுனாச்சும் பேசினாரா....”
“கண்டிப்பா அடுத்த மாசம் வரை திறக்க வாய்ப்பில்லைன்னு சொல்லிட்டாங்க சாந்தி.... துணி தைக்கற கம்பெனிதானே அதுனால அரசாங்கம் திறக்க அனுமதி கொடுக்காதுன்னு சொன்னாரு.... அதுவும் நாங்க தைச்சுக்கொடுக்கறது நிறைய கம்பெனி ஆளுங்களுக்குத்தான்.. கம்பெனியே மூடி இருக்குது.... இதுல எங்க இருந்து ஆர்டர் வர... ஆர்டர் எதுவும் இல்லாம எதை காரணம் காட்டி அரசாங்கத்துக்கிட்ட அனுமதி வாங்க...”
“ஏங்க அவருக்கிட்ட பாதி சம்பளமானும் கேட்டுப்பாருங்களேன்.... அத்தைக்கு வர்ற சம்பளத்துல எத்தனை நாள் ஓட்ட முடியும்....”
“எல்லாம் கேட்டுட்டேன் சாந்தி... அவருக்கு நான் மட்டுமா தொழிலாளி... என்னைய மாதிரி பத்து பேர் வேலை செய்யுறாங்க... வருமானமே இல்லாதப்போ எங்க இருந்து அவரும் கொடுப்பாரு... முதல் ரெண்டு மாசம் ஏதோ ஏற்கனவே இருந்த பணத்தை வச்சு பாதி சம்பளம் கொடுத்தாரு... அதுக்குப் பிறகு அவராலையும் முடியலை... அவரும் பாவம்தான்... கம்பெனி இருக்கற இடத்துக்கு வருமானம் எதுவும் இல்லாம வாடகை கொடுக்கவே திண்டாடிட்டு இருக்காரு...”
“ஹ்ம்ம் அவர் கஷ்டத்தை பார்த்தா நம்ம கஷ்டத்துக்கு என்ன பண்ண... நீங்க வேற எங்கயாச்சும் வேலைக்கு முயற்சி பண்ணுங்களேன்....”
“நானும் அதுதான் யோசிக்கறேன் சாந்தி... ரெண்டு வாரம் முடிஞ்சபிறகு... ஏதாவது வேலை கிடைக்குதான்னு பார்க்கணும்... இருக்கற எல்லாத்தையும் மூடி வச்சிருக்காங்க... இதுல எங்க இருந்து வேலை கிடைக்கறது... பார்ப்போம்... சரி நீ போய் முதல்ல சாப்பிடு...”,சாந்தியின் கணவன் அலைபேசியை வைக்க, என்று இந்த கஷ்டம் தீரும் என்று வருந்தியபடியே குளிக்க சென்றாள் சாந்தி....
அவள் பாதி குளித்துக்கொண்டிருக்கும்போது அலைபேசி ஒலியெழுப்ப முதலில் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று குளிப்பதை தொடர, மறுபடி மறுபடி அலைபேசி தொடர்ந்து அழைக்க, தன் பாட்டிக்கு ஏதேனும் ஆகிவிட்டதோ அதனால் தன் தாயார் அழைக்கிறாரோ என்ற பதற்றத்தில் அவசர அவசரமாக ஒரு நைட்டியை எடுத்து மாட்டியபடியே