குளியலறையிலிருந்து வெளியில் வந்தாள்...
அரைகுறையாக உடம்பைத் துடைத்ததால் அந்த ஈரம், சோப்பின் வழுவழுப்பு எல்லாம் சேர்ந்து இரண்டு அடி எடுத்து வைத்த சாந்தி கால் வழுக்கி கீழே விழுந்தாள்...சாந்தி விழுந்தவுடன் அவளின் பனிக்குடம் உடைந்து கால் வழியாக நீர் வெளியாக ஆரம்பித்தது...
தவழ்ந்தபடியே வந்து தன் அலைபேசியை எடுத்து அன்னைக்கு அழைத்தாள்.... அவர் மருத்துவமனையின் உள்ளே இருந்ததால் சிக்னல் கிடைக்காமல் அவருக்கு போகவில்லை... அடுத்ததாக தன் கணவருக்கு அழைக்க அந்த நேரம் அவன் குளித்துக் கொண்டிருந்ததால் போனை எடுக்கவில்லை...
மெது மெதுவாக வாசல் வரை வந்து கதவைத் திறந்து பார்க்க அந்த தெருவில் ஒரு ஈ, காக்காய் இல்லை... சாந்திக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை... ஏற்கனவே ஒரு குழந்தையை கருவிலேயே இழந்திருந்ததால் எப்படியேனும் இக்குழந்தையை காப்பாற்றி விடவேண்டும் என்று மீண்டும் மீண்டும் தன் கணவருக்கும், அன்னைக்கும் அழைத்தபடி இருந்தாள்...
அடுத்த இருவது நிமிடத்தில் தன் கணவர் அலைபேசியை எடுக்க, தன் நிலையை சொல்லி அழ ஆரம்பித்தாள் சாந்தி...
தன் மகனுக்கு உடல்நிலை சரியாக வேண்டும்... இல்லையென்றால் தன் மாமியாரை படுத்தி எடுத்து விடுவானே என்ற கவலையுடன் தான் வேலை செய்யும் மருத்துவமனை நோக்கி காரை செலுத்த ஆரம்பித்தார் நீரஜா... அவரின் கணவர் அழைக்க சாலை ஓரமாக காரை நிறுத்திய நீரஜா அலைபேசியை எடுத்தார்...
“என்னங்க ஹாஸ்பிடல் கிளம்பலையா... இப்போ கால் பண்ணி இருக்கீங்க...”
“கிளம்பிட்டே இருக்கேன் நீரஜ்... அம்மாக்கிட்ட பேசினேன்.... ராகுல்க்கு உடம்பு முடியலைன்னு சொன்னாங்க... என்னாச்சு....”
“சாதாரண கோல்ட்தான் ராகவ்... வேற ஒண்ணும் இல்லை... மருந்து கொடுத்திருக்கேன்... மதியம் ஒரு முறை போய் பார்க்கிறேன்... நீங்க இங்க வர்றது என்ன ஆச்சு....”
“இப்போதைக்கு முடியாதுன்னு நினைக்கறேன் நீரஜ்... இங்க நாளுக்கு நாள் கேஸஸ் அதிகமாகிட்டே வருது... அதனால இப்போதைக்கு ரிலீவ் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க... நானும் ட்ரை பண்ணிட்டேதான் இருக்கேன்... பார்க்கலாம்... இன்னும் ரெண்டு வாரத்துல சொல்றேன்னு சொல்லி இருக்காங்க....”
“ஏன்தான் இந்த வேலைக்கு ஒத்துக்கிட்டீங்களோ... கொஞ்சம் பணம் அதிகமா வருதுன்னு போனது, இப்போ நீங்க ஒரு இடம், நாங்க ஒரு இடம்ன்னு அவதிப்படறோம்... “
“என்ன பண்ணம்மா, ரெண்டு பசங்களையும் பார்க்கணும் இல்லை... சரி எனக்கு டைம் ஆகுது...