தொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 06 - முகில் தினகரன்
வாடகை, அட்வான்ஸ் குறித்த விபரங்களையெல்லாம் கஸ்தூரி அய்யாவும், சுதாகர்ஜியும் பேசி முடித்த பின், அந்தக் கணமே அட்வான்ஸ் கை மாறியது.
“ஓ.கே...இன்னைக்கே நான் வீட்டுக்கு குடி வந்திட்டேன்” என்று சந்தோஷமாய்ச் சொல்லி விட்டுத் தன் போர்ஷனுக்குத் திரும்பிய ரவீந்தர், முதல் கேள்வியாய் அதைக் கேட்டான். “சுதாகர்ஜி...நான் ஒண்ணு கேட்பேன்...நீ தப்பா நினைக்கக் கூடாது!....வந்து...அந்த வத்சலா...விதவையா?” கேட்டே விட்டான்.
“விருட்”டென்று தலையைத் தூக்கிப் பார்த்த சுதாகர், “ஆமாம் ரவீந்தர்...எப்படிக் கண்டுபிடிச்சே”
“சுவற்றில் அவங்க கல்யாணப் போட்டோ இருந்திச்சு!...அப்புறம் அதுக்கு நாலஞ்சு போட்டோ தாண்டி...அங்க மணமகனாய் நின்றிருந்த ஆண்மகனோட போட்டோ இருந்திச்சு...அந்தப் போட்டோவுக்கு ...மாலையும் போடப்பட்டிருந்தது!...”
“ஓ....”என்ற சுதாகர்ஜி, “பொதுவா தலைப் பிரசவத்துல சிக்கலாகி....பெண்கள்தான் இறந்து போவார்கள்...ஆனா கொஞ்சம் வித்தியாசமா இந்த வத்சலாவோட தலைப் பிரசவத்துல சிக்கலானதுல...அவ புருஷன் ஆனந்தன் இறந்து போனான்” என்றார்.
“என்னது?...அவங்களோட தலைப் பிரசவத்துல அவங்க புருஷன் இறந்திட்டாரா?...புரியலையே?”
“வத்சலாவுக்கு பிரசவ வலி வந்தும் குழந்தை தலை திரும்பாமல் போக...ரொம்ப சிரமப்பட்டா...ஒரு கட்டத்துல ரெண்டு உசுருமே பிழைக்காது!ங்கற நிலைமை வந்தப்ப...எல்லோரும் கதறினாங்க!....ஆளுக்கொரு பக்கம் ஆண்டவனை வேண்டினாங்க!...அவ புருஷன் பைத்தியம் பிடிச்சவன் மாதிரி அங்குமிங்கும் ஓடினான்!...அப்ப....” சட்டென்று நிறுத்திய சுதாகர் கண்களை மூடி, தொண்டையில் வந்து அடைத்த துக்கத்தை விழுங்கிக் கொண்டு தொடர்ந்தார்.
“எந்த ஆண்டவன் கருணையினாலோ...வத்சலாவுக்கு சுகப்பிரசவம் ஆகி...அழகான ஆண் குழந்தையைப் பெற்றாள்!....அந்த தகவல் ஆனந்தனுக்குப் போனதும் சந்தோஷத்தில் கூவிக் கொண்டு வராண்டாவில் ஓடி வந்தான்...அப்போதுதான் அந்த ஆஸ்பத்திரி தரையை சோப் வாட்டரால் கழுவி விட்டிருந்தார்கள்... “தரை ஈரம் யாரும் நடக்க வேண்டாம்”ன்னு போர்டையும் குறுக்கே வெச்சிருந்தாங்க!...ஆனா...அதீத சந்தோஷத்தோடு வந்த ஆனந்தன்...அதைக் கவனிக்காமல்...தரை வழுக்கி “தொபீர்”ரென்று மல்லாக்க விழுந்தான்!...பின்னந்தலை தரையில் பலமாக மோதியதில் மண்டை பிளந்து ரத்தச் சக்தியானது!...அதே ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்து சிகிச்சை கொடுத்தும் பலனில்லாமல் நினைவு வராமலேயே இறந்து போனான்...அந்த ஆனந்தன்!...கொடுமை என்னவென்றால்...தன் குழந்தையின் முகத்தைக் கூடப் பார்க்கவில்லை அவன்!” சொல்லி முடித்து விட்டு நெஞ்சின் பாரத்தை ஆழ்ந்த மூச்சின் வழியே வெளியேற்றினார்