அவனை முறைத்து விட்டு, தெருவில் இறங்கி நடந்தார் சுதாகர்ஜி.
அவர் சென்ற ஐந்தாவது நிமிடம், “உள்ளார வரலாமா?” மயிலிறகு குரல் வாசலில் ஒலிக்க, உதிரச் செல்கள் சிலிர்த்தெழ, ஓடினான் ரவீந்தர் வாசல் நோக்கி.
வத்சலா, தன் மகனுடன் நின்று கொண்டிருந்தாள். போட்டோ இளைஞனின் சின்ன சைஸாய் இருந்தான் அவள் மகன்.
“தாராளமா வாங்க!...உங்க வீடு” வழி விட்டான் ரவீந்தர்.
“என்ன...?...வீட்டுல பாத்திரம் பண்டம்...அடுப்பு ஒண்ணையும் காணோம்?” சுற்றும்முற்றும் பார்த்துக் கொண்டே கேட்டாள் வத்சலா.
“அதெல்லாம் நாளைக்குத்தான் வரும்” என்ற ரவீந்தர், அந்தச் சிறுவனைப் பார்த்து, “உன் பேரென்ன?” கேட்டான்.
“ஆதேஷ்”
“ஓ...குட் நேம்!...ஆதேஷ் என்ன படிக்கறே?” அவன் தலையைக் கலைத்தவாறே கேட்டான் ரவீந்தர்.
“யூகேஜி” ரவீந்தரை நேருக்கு நேர் பார்த்து கொஞ்சமும் தயக்கமில்லாமல் பதில் சொன்னான் அவன்.
“நல்லா படிக்கணும்...என்ன?”
“அடக் கடவுளே!...”என்று சொல்லி முன் நெற்றியில் அடித்துக் கொண்ட அந்த ஆதேஷ், “யாரைப் பார்த்தாலும் “நல்லாப் படி...நல்லாப் படி”ன்னே சொல்றீங்களே?...யாராச்சும் ஒருத்தராவது “நல்லா சாப்பிடு”ன்னு சொல்லலாம் அல்ல?” என்றதும்,
“டேய்...ஆதேஷ்!....ச்சூ...சும்மாயிரு” அதட்டினாள் வத்சலா.
“ஹா....ஹா...”வென்று சிரித்த ரவீந்தர், “நோ...தடுக்காதீங்க!...இந்த மாதிரி கூச்சமில்லாம....புது மனுஷன் என்கிற தயக்கமில்லாம தைரியமா பேசறானே?...அது பெரிய வரம்ங்க!...அது போதுங்க..இவன் வாழ்க்கைல பெரிய மார்க்கெட்டிங் பர்ஸனா வர்றதுக்கு” தன் மார்க்கெட்டிங் புத்தியைக் காட்டினான் ரவீந்தர்.
“நான் போய் ஸ்டவ்வும்...பாலும்...பால் பாத்திரமும் கொண்டு வர்றேன்...அதை வெச்சுக் காய்ச்சிட்டு...அப்புறமா குடியேறுங்க” என்றாள் வத்சலா.
“ஏங்க...எதுக்குங்க...அந்த ஃபார்மாலிட்டீஸெல்லாம்?...எப்பவோ ஒரு காலத்துல...ஏதோ ஒரு காரணத்துக்காக...யாரோ ஒருத்தர் புதுசா குடி வந்த வீட்டுல உடனடியா ஏதுவும் செய்ய முடியாதுன்னு..பாலைக் காய்ச்சி...அதுல சர்க்கரையைப் போட்டுக் குடுத்திருக்காரு!...அதையே சடங்காக்கி...சம்பிரதாயமாக்கி...ம்ஹும்...என்னால ஏத்துக்க முடியலைங்க” தலையை வேகமாய் இடம் வலம் ஆட்டிச் சொன்னான் ரவீந்தர்.