சுதாகர்ஜி.
அதைக் கேட்டு முடித்ததும் சில நிமிடங்கள் அமைதியாய் தரையையே பார்த்தபடி நின்று கொண்டிருந்த ரவீந்தரின் தோளைத் தொட்டு உசுப்பிய சுதாகர்ஜி, “ரவீந்தர்....“எது உன்னிடம் நிலைக்கும் என்று நீ நினைக்கின்றாயோ...அதுதான் முதலில் உன்னை விட்டுப் போகும்!...இங்கு யாருக்கும், எதுவும் நிரந்தரமில்லை!..என்பதே நிதர்சனம்” அப்படின்னு நான் சொல்லலை...கீதைல பகவான் சொல்லியிருக்கார்!...”என்றார்.
“என்னைப் பொறுத்த வரையில் “வாழ்க்கை...சற்றுக் கடினமானதுதான்!...ஆனால்...முடியாதது இல்லை” ஒரு மார்க்கெட்டிங் மனிதனாகப் பேசினான் ரவீந்தர்.
“அப்படியில்லையப்பா....எல்லா கடினங்களையும்...நாம எளிதாக்கி விட முடியாது!..சில கடினங்களை நாம் வேதனையோடு கடந்துதான் ஆக வேண்டும்!...அதுதான் இறைவன் நியதி!..” சுதாகர்ஜி சொல்ல,
“நியதி என்பதை நீயும்...நானும்தான் உருவாக்க முடியும்!...இறைவனால் உருவாக்க முடியாது!...சாமார்த்தியத்தையும்...சாதூர்யத்தையும்...புத்திக் கூர்மையையும்...முறையாக நாம் கற்றுணர்ந்து...அதைச் செயலில் காட்டினால்...எதுவும் எளிது!” மார்க்கெட்டிங் பேசியது.
“நீ சொல்கிறபடி பார்த்தால் உலகத்தில் ஏற்ற தாழ்வுகள்...ஏழை பணக்காரன் வித்தியாசமே இருக்க கூடாதே?...எல்லோரும் சாமார்த்தியமாய் செயல் பட்டு எல்லோருமே பணக்காரர்களாய் இருக்கலாமே?...ஆக...இறைவன் நிர்ணயிக்கும் நியதிதான்...நிலைப்பாடு” ஆன்மீகவாதியாய்ப் பேசினார் சுதாகர்ஜி.
“ஹா...ஹா...ஹா...இன்னிக்கு ராத்திரி...தூங்குவதற்கு முன்னாடி...நான் சொன்னதையெல்லாம் யோசிச்சுப் பாரு!...புரியும்!....“கடவுள் வரமெல்லாம் தர மாட்டார்!...சந்தர்ப்பம்தான் தருவார்!...அதை வரம் ஆக்குவதும்...சாபம் ஆக்குவதும்...நம் கையில்தான் உள்ளது!” சுதாகர்ஜி என்னும் அந்த ஸ்வாமியையே உலுக்கும் விதத்தில் ஆணித்தரமாய்ச் சொன்னான் ரவீந்தர்.
“இந்த வாதத்தில் ஈடுபட்டால்...முடிவே கிடைக்காது!” என்ற சுதாகர்ஜி, “அப்ப நான் கிளம்பறேன்!”என்று சொல்லி விட்டு வாசல் வரை சென்று விட்டு, “ஆமாம்...உன்னோட சாமான்களெல்லாம் எப்ப வரும்?” அங்கிருந்தே கேட்க,
“என்னோட மெட்டீரியல்ஸ் என்னை விட சுறுசுறுப்பு...எனக்கு முன்னாடியே வந்து...எங்க பொள்ளாச்சி ஆபீஸ்ல இருக்கு!...நாளைக்குத்தான் ஒரு மினி ஆட்டோவோ...டெம்போவோ வெச்சு இங்க கொண்டு வரணும்”
“அப்படின்னா சரி...ஏதாச்சும் உதவி வேணும்னா கூப்பிடு”
“அதே மாதிரி...சுதாகர்ஜிக்கும் ஏதாவது உதவி வேணும்னா என்கிட்ட கேட்கலாம்!” இரு கைகளையும் விரித்துக் காட்டிச் சொன்னான் ரவீந்தர்.