முறுங்கை காயை மென்று கொண்டே சொன்னான் சுதாகர்.
“ஏதாச்சும் முக்கியமான காலாய் இருக்கப் போகுதுடா”
“க்கும்...என்னை ராணுவ மந்திரி கூப்பிட்டு...“பாகிஸ்தான் கூட எப்ப போர் வெச்சுக்கலாம்”னு கேட்கப் போறாரு!...அடப் போடா...அது அடிச்சிட்டே இருக்கட்டும் விடு” என்று அலட்சியமாய் மொபைலைப் பார்த்த சுதாகர், அதில் டிஸ்ப்ளே ஆகும் பெயரைப் பார்த்து விட்டு, “பொள்ளாச்சியிலிருந்து எங்க சித்தப்பா கூப்பிடறார்” என்றான்.
“காலை அட்டெண்ட் பண்ணவா?” ரவீந்தர் கேட்க,
“ஒண்ணும் அவசரமில்லை...சாப்பிட்டு முடிச்சிட்டே பேசலாம்” என்று சொல்லி விட்டு, ஆற...அமர சாப்பிட்டு முடித்த சுதாகர், நிதானமாய்ச் சென்று கை கழுவி விட்டு வந்து பொபைலை எடுத்தான்.
“சொல்லுங்க சித்தப்பா...”
“சுதாகர்...எங்கே...ஹாஸ்டலிலேயா இருக்கே?” எதிர்முனைக் குரல் அவசரமாய் கேட்டது.
“இல்லை சித்தப்பா...இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமையாச்சே...அதான் வெளியில் வந்திருக்கேன்” சாதரணமாய்ச் சொன்னான் சுதாகர்.
“உடனே கிளம்பி ஊருக்கு வாப்பா” சித்தப்பாவின் குரலில் பதட்டம் அதிகமாயிருந்தது.
“என்ன சித்தப்பா?...என்ன பிரச்சினை?” படபடப்பாய்க் கேட்டான்.
“காலைல அஞ்சு மணிக்கு குளிச்சுக் கோயிலுக்குக் கிளம்பிட்டிருந்த உங்கப்பா...திடீர்னு மயக்கம் போட்டு விழுந்திட்டார்!...”
“ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணியிருக்கோம்...டிரீட்மெண்ட் போயிட்டிருக்கு”
“சித்தப்பா....அப்பாவுக்கு ஒண்ணும் சீரியஸ் இலையே?” கரகரத்த குரலில் கேட்டான் சுதாகர்.
“இல்லைப்பா....டாக்டர் கொஞ்சம் சீரியஸ்னுதான் சொல்றார்!...எமர்ஜென்ஸில வெச்சுப் பார்த்திட்டிருக்காங்க!...நீ உடனே கிளம்பி வந்திடுப்பா”
“சரி சித்தப்பா...இப்பவே கிளம்பி வர்றேன்” என்று சொல்லி விட்டு இணைப்பிலிருந்து வெளியே வந்த சுதாகர், “ரவீந்தர்...ஊர்ல அப்பாவுக்கு உடம்பு சரியில்லையாம்...அதுக்குத்தான் சித்தப்பா போன் பண்ணியிருக்கார்!...நான் உடனே போயாகணும்” பதட்டமாய்ச் சொன்னவன் அருகில் வந்த அலமேலு, “பயப்படாதப்பா..அப்பாவுக்கு ஒண்ணும் ஆகாது” என்றாள் ஆறுதலாய்.
“இல்லைங்க அம்மா...டாக்டர் ரொம்ப சீரியஸ்னு சொல்லிட்டாராம்!...நான் உடனே கிளம்பறேன்” என்று அலமேலுவிடம் சொன்ன சுதாகர், ரவீந்தரைப் பார்த்து, “டேய்...என்னை பஸ் ஸ்டாண்டுல டிராப் பண்ணுடா!...அப்புறம்...காலேஜ்ல லீவ் சொல்லிடு” என்றான்.
இருவரும் வெளியேற, “பார்த்து மெதுவா ஸ்கூட்டரை ஓட்டிட்டுப் போடா ரவீந்தர்...”என்று சொல்லியனுப்பினாள் அலமேலு.
அன்று மாலையே ரவீந்தருக்கு போன் மூலம் அந்த தகவல் வந்தது. “அப்பா இறந்திட்டார் ரவி”