சிறப்புமா கல்யாணம் பண்ணி வெச்சேன்!...ரெண்டு பேரும் அவங்கவங்க புருஷன் வீட்டுல சந்தோசமா இருக்காங்க!”
“உங்க சிஸ்டர்?”
‘ப்ச்...அவளுக்குத்தான் கடைசி காலத்துல கான்சர் வந்திட்டுது!...இப்ப அவளுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணற வேலையாத்தான் அலைஞ்சிட்டிருக்கேன்!” மிகவும் காஷுவலாக அந்தப் புரபஸர் தமிழ்மணி சொன்ன விஷயங்கள் கைலாஷை நெக்குருக வைத்தன.
“அக்காவைப் பெண் பார்க்க வர்றாங்க!...ஆட்டுக்குட்டியைப் பெண் பார்க்க வர்றாங்க!”ன்னுசொல்லிட்டு நான் டூர் போறதைத் தவிர்த்தேன்னா...எனக்கு வேலையே போனாலும் போயிடும்!...”
காலையில் வீட்டில் தான் சொல்லி விட்டு வந்த வார்த்தைகள் அவன் காதுகளில் மீண்டும் எதிரொலித்து, அவன் மனத்தைக் கனத்துப் போகச் செய்தன.
“ஓ.கே.கைலாஷ்...மீண்டும் சந்திப்போம்!...நான் வர்றேன்!” சொல்லி விட்டு அவர் சென்று வெகு நேரமாகியும் கைலாஷால் இயல்பு நிலைக்கு வரமுடியவில்லை.
“தன் கூடப் பிறந்த அக்காவுக்காக தன் மொத்த வாழ்க்கையையே தியாகம் பண்ணிட்டு, அதை சர்வ சாதாரணமாய்ச் சொல்லி விட்டுப் போகிற இந்த மனிதர் எங்கே?...அக்காவைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வருகிற போது கூட என் டூர் புரோகிராமை ஒத்திப் போடாத நான் எங்கே?...”
தன்னால் அந்த டூர் புரோகிராமைத் தள்ளிப் போட முடிந்தும், முடியாது என்று பொய் சொல்லி விட்டு வந்து உட்கார்ந்திருக்கும் தன்னை நினைத்து நினைத்து வெட்கப்பட்டான் கைலாஷ்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, அவன் கைகள் அவனையேயறியாமல் ரிசர்வேஷன் டிக்கெட்டைக் கிழித்துத் தரையில் போட,
கால்கள் எழுந்து வீடு நோக்கிச் செல்ல தயாராகின. இதயம் நிறைந்தாற் போலிருந்தது அவனுக்கு.
****
அவன் வீட்டை அடைந்த போது, தேவநாதனும், சுலோச்சனாவும் தாங்களே களத்தில் இறங்கி, அந்த இடத்தைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்க,
தன் கையிலிருந்த பேக்கை வீட்டினுள் கொண்டு போய் வைத்துவிட்டு, தானும் வந்து அவர்களோடு கலந்து கொண்டதோடல்லாது, “சுலோச்சனாக்கா....நீ ஏன் வெயில்ல வேலை செய்யறே...நீ உள்ளார போ...நான் வந்துட்டேனல்ல நான் பார்த்துக்கறேன்!” என்றான்.
அவனிடம் ஏற்பட்டிருந்த அந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் புரியாதவளாய் வீட்டிற்குள் திரும்பிச் சென்றாள் சுலோச்சனா.