பார்த்து, விஷயத்தை ஓரளவிற்கு யூகித்து விட்டு, சுலோச்சனாவிடம் கேட்டாள்.
“என்னக்கா...மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றாங்களா?”
“ஆமாம்...நாளைக்குக் காலைல வர்றாங்க!”
“இந்த மாப்பிள்ளை எந்த ஊரு?..” புடவையைக் களைந்து கொண்டே கேட்டாள்.
“பல்லடமாம்!...அங்க மில்லுல சூப்பர்வைஸராம்!”
“ஓ...சூப்பர்வைஸரா?...அப்ப சூப்பராய்த்தான் இருப்பார்!” அர்ச்சனா கேலி செய்ய,
வேக, வேகமாய் அறைக்குள் வந்த பார்வதி, சுலோச்சனாவைப் பார்த்துக் கண்களால் எதையோ கேட்க, அதற்கு சுலோச்சனா “இல்லை” என்று தலையை இட வலமாய் ஆட்டி பதில் சொன்னாள்.
இரண்டு பேரையும் மாறி மாறிப் பார்த்த அர்ச்சனா, “என்ன ரெண்டு பேரும் சங்கேத பாஷையில் எதையோ பேசிக்கறீங்க?...என்கிட்ட சொல்லக் கூடாத ரகசியம் ஏதாவது இங்க ஓடிக்கிட்டிருக்குதா?” நைட்டிக்குள் நுழைந்தவாறே கேட்டாள்.
“அது...வந்து...”என்று சுலோச்சனா எதையோ சொல்லத் தயங்க,
அவள் தயக்கத்தைப் பார்த்த பார்வதி, “எதுக்குடி தயங்கறே?... “பட்டு”ன்னு சொல்ல வேண்டியதுதானே?” என்று சொல்லி விட்டு தானே சொல்ல ஆரம்பித்தாள், “த பாரு அர்ச்சனா!...போன தடவை இங்க என்ன நடந்தது?ன்னு உனக்கு நல்லாத் தெரியும்!...அது மாதிரி இந்தத் தடவையும் நடந்திடக் கூடாது!...அதனால....”
“அதனால?”
“நாளைக்கு நீ வெளியவே வர வேண்டாம்!..மாப்பிள்ளை கண்களிலோ...மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கண்களிலோ படவே வேண்டாம்!” என்றாள் பார்வதி கறாராய்.
“ஏன்?”என்று எடுத்த எடுப்பில் கேட்டு விட்டு, உடனே அதன் காரணத்தைத் தானே யூகித்துக் கொண்டு, தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.
“என்ன புரிஞ்சுதா?” ஆட்காட்டி விரலைக் காட்டி எச்சரிக்கும் விதமாய் அம்மா சொல்ல,
“அம்மா...நான் வேணா ஒரு நெற் குதிருக்குள்ளாரவோ...இல்லை புளி போட்டு வைக்கற மொடாவுக்குள்ளாரவோ போய் ஒளிஞ்சுக்கட்டுமா?” வேண்டுமென்றே கிண்டலாய்க் கேட்டாள் அர்ச்சனா.
அவள் கிண்டலைப் புரிந்து கொண்ட பார்வதி, “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்!...இந்த அறைக்குள்ளாரவே அக்கா கூட இரு!...அவளுக்கு வேணும்கற மேக்கப்பெல்லாம் பண்ணி விடு!..எந்தக் காரணத்தைக் கொண்டும் வெளிய வந்துடாதே!” என்றாள்.
செல்லமாய்ச் சிணுங்கிய அர்ச்சனா, “அம்மா...எனக்கு மட்டும் அந்த மாப்பிள்ளையைப் பார்க்கணும்கற ஆசை இருக்காதா?” என்று கேட்க,