கிளீனிங் வேலைகளை முடித்த பிறகு, பக்கத்துப் போர்ஷனுக்குச் சென்று வழக்கம் போல் டீப்பாயையும், பிளாஸ்டிக் சேர்களையும் கடன் வாங்கி வந்தார் தேவநாதன். அவ்வாறு அவர் சேர்களை வாங்கி வருவதை ஓரக் கண்ணால் கவனித்துக் கொண்டிருந்த வீட்டு ஓனரம்மாவிற்கு உள்ளே மனம் உலையாய்க் கொதித்தது. “ஒரு பெரிய மனுஷி நான்!...என் கிட்ட ஒரு வார்த்தை “இந்த மாதிரி எங்க பொண்ணை இன்னிக்குப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றாங்க!”ன்னு சொன்னா என்ன கொறைஞ்சா போயிடும்?...நான் என்ன இவங்க சுட்டு வெச்சிருக்கற பஜ்ஜி...சொஜ்ஜியையா கேட்கறேன்?” என்று தன் மன ஆற்றாமையைத் தன் வாய் செத்த கணவரிடம் சொல்லிப் புலம்ப,
“அட...அவங்க வீட்டுல என்னமோ நடந்திட்டுப் போகுது...அதைப் பத்தி உனக்கென்ன?...சொன்னாக் கேட்டுக்கோ...சொல்லாட்டி விட்டுடு...இதையேன் பெரிசா நெனச்சுப் பொலம்பிட்டிருக்கே?” என்றார் கஸ்தூரி.
“அப்படியில்லைங்க!...இதுகளையெல்லாம் நம்பமுடியாது!...வர்றவங்க கிட்டே இது இவங்களோட சொந்த வீடுன்னு கூடச் சொன்னாலும் சொல்லிடுவாங்க!...அதான்...நம்மைக் கூப்பிட்டா...நாம எங்காவது எக்குத்தப்பா அந்த பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிடுவோம்!கற பயம்!”
“ப்ச்!...ச்ம்பூர்ணம் நீ எதுக்கு தேவையில்லாததை எல்லாம் கற்பனை பண்ணிக்கிட்டிருக்கே?...அப்படியே அவங்க இதை தங்களோட சொந்த வீடுன்னு சொல்லிட்டா உடனே அது அவங்களோடது ஆயிடுமா?...போ...போய்...உன் வேலை என்னவோ...அதை மட்டும் பார்!...அதை விட்டுட்டு....அந்த வீட்டுல அம்மி நகருதா?...இந்த வீட்டுல ஆட்டாங்கல் நகருதா?ன்னு பார்த்துக்கிட்டே இருக்காதே!...என்ன?” என்று சொல்லிக் கொண்டே தன் முகத்தைச் சுருக்கிக் கொண்டு கையை முதுகிற்குப் பின்னே கொண்டு போய் தன் முதுகைத் தானே நீவிக் கொண்டார். அப்போது அவர் முகத்தில் ஒரு வேதனை ரேகை ஓடி மறைய,
“ஏன்?..என்னாச்சு?...ஏன் உங்க முகம் ஒரு மாதிரிச் சுருங்குது?...அதுகளைத் திட்டினா உங்களுக்குக் கோபம் வருதா?” எங்கோ காட்ட முடியாத கோபத்தை அவர் மீது காட்டினாள் சம்பூர்ணம்.
“அதில்லைடி...ஏனோ முதுகுல இடது பக்கமா “சுருக்...சுருக்”னு வலிக்குது!”
“வலிக்குதல்ல?...அப்புறம் எதுக்கு என் கூட வாக்குவாதம் பண்றீங்க?...போய் உள்ளார போய்..படுத்து ரெஸ்ட் எடுங்க!” என்றாள் சம்பூர்ணம் “கடு...கடு”வென்று.
“க்கும்...உன் கூட வாக்குவாதம் பண்றேன்னு பகவான்கிட்ட வேண்டியிருக்கேன்...அதான் பண்றேன்!” சொல்லிக் கொண்டே எழுந்து வீட்டிற்குள் போனார் சம்பூர்ணத்தின் கணவர் கஸ்தூரி.
****
சனிக்கிழமை மாலை அலுவலகத்திலிருந்து திரும்பி வந்த அர்ச்சனா வீட்டின் நிலைமையைப்