தான். ஆனால் உன் காதல் அதையெல்லாம் தூள்தூளாக்கிடுச்சு. இந்த கல்லூரிப் படிப்பைப் பொறுத்தவரை காதல் ஒரு தடைன்னு நான் நினைக்கல. நீயும் அப்படி நினைக்கக் கூடாது, நடந்துக்ககூடாது. அம்மா, அப்பா நம்ம காதலுக்கு சம்மதிக்க நாம நல்லபடியா படிச்சு முடிச்சு நல்ல எதிர்காலத்தை அமைசுக்கணும். இதற்கு எந்த இடைஞ்சலும் வரக்கூடாது. அன்புடன், உன் முட்டைகண்ணி”
கடிதத்தை ஆயிரம் முறையாவது படித்திருப்பான். சின்ன சாக்லேட் கவருக்குள் ஒரு கடிதம். குட்டிக் குட்டியான எழுத்தில் அவ்வளவு அழகான கையெழுத்தில் தன் மனதில் நினைப்பதையெல்லாம் கொட்டியிருந்தாள். இவளின் காதல் கிடைத்ததை விட இவளை நன்கு பார்த்துக் கொள்வதில் தன் காதலின் உண்மையான வெற்றியே இருக்கிறது என்று நினைத்தான் தினேஷ். உற்சாகம் பொங்க வீட்டில் நுழைந்தவனிடம், அம்மா என்ன தினேஷ் ஒரே ஆட்டமா ஆடிட்டு இருக்க என்று கிண்டலாக கேட்க, ஆங் எனக்கொரு பொண்ணு லவ் லெட்டர் கொடுத்தா அதான் என்றான் தினேஷும் கிண்டலாக
உனக்கு ஒரு பொண்ணு லெட்டர் கொடுத்தாளா? அப்படி ஒரு அப்பிராணி யாருப்பா அது? அம்மா தொடர்ந்து கேள்வி கேட்கவும்,
சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்மா உடனே யாரு என்னன்னு என்னைத் துளைச்சு எடு. இப்போ நீ என்ன எனக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணியா வைக்கப்போற?
ம். போற போக்கைப் பார்த்தா, உன் அண்ணன் ராஜேஷுக்கு முன்னாடி உனக்குத் தான் கல்யாணம் ஆகும் போல!
சும்மா இருக்கியா நீ !
பால் வேணும்னு அன்னிக்கு கேட்டியே. இன்னிக்கு எக்ஸ்ட்ரா இருக்கு. வேணும்னா சாதத்துல போட்டு சாப்பிடு.
குழம்பு எதுவும் வைக்கலையா?
அம்மாவுக்கு கொஞ்சம் முடியலடா, தயிர் தான் இருக்கு.
சரிம்மா. நான் தயிர் சாதம் சாப்பிட்டுக்கிறேன்.
நீ ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே, ஏன் முடியலன்னு சொல்லிட்டே டூட்டிக்குக் கிளம்பிப் போற?
இன்னிக்கு எனக்கு மாத்தி விட யாரும் சிஸ்டர்ஸ் இல்லைடா.
சரி! பத்திரமா போம்மா! என்று அனுப்பி வைத்தவன்.
சாப்பிட மறந்து மீண்டும் மீண்டும் அந்தக் கடிதத்தை வாசித்துக் கொண்டே இருந்தான். பசி வயிற்றைக் கிள்ளவும், தட்டில் போட்டு சாப்பிட்டுக் கொண்டே, அந்த கடிதத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.