அவளை நிறைவாய் பார்த்தவன். டீ- தாங்க இதோ வாங்கிட்டு வந்துடறேன் என்று அவன் செருப்பைப் போட்டுக்கொண்டு வெளியே வர,
அங்கு அவன் தந்தை பால் பாக்கெட்டுடன் வாசலில் உள்ள கோலத்தை பார்த்துக் கொண்டே வந்து கொண்டிருந்தார்.
என்ன கோலம் எல்லாம் போட்டு இருக்கு. இன்னைக்கு எதுனா விசேஷமா நமக்கு தெரிஞ்சு எந்த விசேஷமும் இல்லையே என்று அவர் எண்ணிக் கொண்டே வர....
எதிரே அவர் இளையமகன் சிரித்த முகமாக அவரை வழிமறித்தான்.
அவனைப் பார்த்தவர். முகத்தை திருப்பிக் கொள்ள....
அப்பா இன்னும் என் மேல கோபமா தான் இருக்கீங்களா......
அவர் பதில் பேசாமல் விலகி நடக்க.....
அப்பா என்ன மன்னிச்சுடுங்கப்பா...
அவர் அமைதியாக அதே இடத்தில் நிற்க,
அவரை பாவமாக பார்த்தவன். சரி பால் பாக்கெட் குடுங்க.
அவர் அதே நிலையில் அமைதியாக நின்றார்.
அதனைப் பார்த்தவன் அவர் கையில் இருந்த பால் பாக்கெட்டை அவனே வாங்கிக்கொண்டு வீட்டின் உள்ளே சென்றான்.
உள்ளே இருந்த சிறிய சாமி செல்ஃபில் விளக்கேற்றியவள். ஊதுபத்தி சாம்பிராணி வீடு முழுவதும் காட்டி மனம் பரப்பியபடி, காயத்ரி மந்திரத்தை கூறிய படி விபூதியை நெற்றியில் பூசிக் கொண்டாள்.
கதிர் வந்தவன் காலையிலிருந்து அவள் செயல்களை ஆச்சரியமாக பார்த்த படியே, பால் பாக்கெட்டை கிச்சனில் வைத்துவிட்டு அவள் அருகே வந்தான்.
அதுக்குள்ள வந்துட்டீங்களா கதிர். என்று ஹஸ்கி வாய்சில் பேசியபடியே அவன் நெற்றியில் திருநீறை பூசி விட்டாள்.
அவன் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் மட்டுமே சாமிக்கு விளக்கு ஏற்றி வழிபடுவர். வருடத்தில் ஓரிரண்டு முறை தான். அவனுக்கு அவன் அன்னை சிறுவயதில் திருநீரு வைத்துவிட்டது. இப்பொழுதெல்லாம் அவனே பூசிக் கொள்வான். இவள் பூசி விட்டதும் அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவனுக்கு பிடித்த தேவதைதான். அவள் எது செய்தாலும் ரசிப்பான். ஆனால் அவனுக்குப் பிடித்த ஒவ்வொன்றையும் காலையிலிருந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறாள். தன் வீடு எப்படி இருக்கவேண்டும் என்று அவன் மனதில் எண்ணி இருந்தானோ அதனை காலையிலிருந்து படம் பிடித்து காட்டி கொண்டிருந்தாள்.