அவள் என்ன சொன்னாலும் அதற்கு தலையசைக்க மட்டும் செய்வதையும் யோசித்து பார்க்கும் போது ஜனனியால் புரிந்துகொள்ள முடிந்தது. ஸ்வீனாவிடம் தன் எதிர்ப்பை காட்ட முடியாத ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஜனா அஸ்விட்டை பார்த்து முறைப்பது, அதற்கு அவன் கண்டுகொள்ளாமல் வாய்க்குள்ளேயே சிரித்துக் கொள்ளுவதும் ஜனனியின் மனக்கண்ணில் தெளிவாக தெரிந்தது.
அப்படி என்றால் இவர்கள் இடையே எவ்விதமான தகாத உறவும் இல்லை என்பது உண்மைதான். ஆனால் இவர்களைப் பற்றி தவறாக பேச அந்தப் பெண்மணியின் பெண்ணிற்கும் அவளது தோழிக்கும் எப்படி மனம் வந்தது?. முதல் திருமணம் என்ன ஆனது? அவரது மனைவி இறந்து விட்டதாக கேள்விப்பட்டோமே? தன்னுடைய அம்மா உலகில் இல்லை என்று தானே தனுவும் சொல்லிக் கொண்டாள்.
ஆனால் இந்தப் பெண்மணியோ அந்த முதல் மனைவி உயிருடன் இருப்பதாக சொல்கிறாரே... எது உண்மை... ஜனாவின் வாழ்க்கையில் அப்படி என்னதான் நடந்திருக்கும்? எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று யோசித்தாள்...
அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட அவளுக்கு ஸ்வீனாவுக்கும் ஜனாவிற்குமான இடைப்பட்ட இந்த உறவு நட்பையும் தாண்டி வேறு விதமானது... ஆனால் புனிதமானது... இவர்களுக்கு இடையே இருக்கும் இந்த உறவு எப்படி உருவானது என்பதை அறிந்து கொள்ளும் ஒரு ஆவலும் ஏற்பட்டது.
சில நாட்களுக்கு முன்பு ஜனா அவனது அக்கவுண்டில் இருந்து பத்து லட்சம் ரூபாயை ஸ்வீனாவின் அக்கவுண்ட்டிற்கு மாற்றி இருந்தது நினைவு வந்தது.
அதற்கான காரணத்தை யோசிக்க ஆரம்பித்தவளுக்கு கடைசியாக அவள் கம்பெனியின் சில விஷயங்களை சரி செய்து கொண்டிருக்கும் பொழுது கணக்கு சம்பந்தமான பைல் நினைவிற்கு வந்தது.
அது ஜனாவின் கம்பெனியில் ஏற்பட்ட திடீர் நஷ்டத்தை பற்றிய கணக்கீடும் அதை சரி செய்த ரெகார்ட்ஸ்ம் இருந்தது... அப்போது அந்த கணக்கை பார்த்த போது ஏதும் தோன்றவில்லை.. ஆனால் தற்போது யோசித்துப் பார்க்கும்போது அவ்வளவு பணம் உடனே எப்படி கிடைத்து இருக்கும்... யார் உதவி செய்து இருப்பார்கள் என்ற பெரிய கேள்வி வந்து நின்றது.
இப்பொழுது ஆழ்ந்து யோசித்து பார்க்கும் பொழுது ஸ்வீனா குடும்பத்தினர் செய்து இருப்பார்களோ... என யோசிக்க ஜனனிக்கு எதுவும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் அவர்கள் உறவும் ஒரு உன்னதமான உறவு என்று மட்டும் அவள் மனம் அவளுக்கு கோடிட்டுக் காட்டியது.