தொடங்கிய இந்த நாள் முதல் ஏனோ இயல்பாக இருக்க முடியவில்லை.
அவன் பேச்சு மட்டுமல்ல சில சமயங்களில் அவனின் பார்வை அவளை ஆராய்ந்து செல்லும் பொழுது தனக்குள் எழும் உணர்வு அச்சமா அல்லது வெட்கமா என்று அவளுக்கே தெரியவில்லை.
ஆரம்பத்தில் கோபமாகவும் எரிச்சலாகவும் நடந்து கொண்டபோது கூட ஜனனிக்கு ஒரு பதட்டம் ஏற்படவில்லை. அதன் பிறகு வந்த நாட்களில் அவன் கண்டும் காணாமல் ஜனனி என்ற ஒருத்தி இருப்பதாகவே நினைக்காமல் அவன் பாட்டுக்கு இருக்க அந்த நாட்கள் வெறுமையாக கழிந்தாலும் ஜனனிக்கு ஒரு பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கவில்லை. ஆனால் இப்பொழுதோ அவளுக்கே தெரியாமல் சில சமயம் அவளையே பார்த்துக் கொண்டிருக்கும் அவனின் செயல்கள் ஜனனிக்குள் ஒருவித மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தது.
முன்னாளெல்லாம் எந்தவித எதிர்பார்ப்புமின்றி அன்றைய நாள் தொடங்கியது. ஆனால் இப்பொழுது சில நாட்களாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு எதிர்பார்ப்புடன் தொடங்குகிறது.
அன்று காலை தனுவை பள்ளிக்கு அனுப்பி விட்டு தன் மதிய உணவிற்கான வேலைகளை செய்து கொண்டிருந்தால் ஜனனி.
காலையில் தனுவை ஜனனி கொண்டு பள்ளியில் விட்டு விட்டு வந்து விட்டாள். இன்று ஒரு மணி அளவில் ஒரு முக்கியமான பிசினஸ் மீட்டிங் இருப்பதால் காலை ஆபீஸ் செல்ல வேண்டியதில்லை என்பதால் மெதுவாக சமையல் செய்துகொண்டிருந்தாள்.
ஜனா தீவிரமாக தன் வேலையில் ஈடுபட்டு கொண்டு இருந்தான்.
ஜனாவோ தன் வேலையை சீரியசாக செய்து கொண்டிருந்ததால் தலை வலிப்பது போல தெரிந்தது.
எப்பொழுதும் காலை மாலை இரு வேளைகளிலும் தேநீர் அருந்துவது மட்டும்தான் பழக்கம். இடைவெளிகளில் எப்பொழுதும் தேநீர் அருந்துவதில்லை.
ஆனால் இன்று அவனுக்கு தேநீர் குடித்தால் பெட்டராக இருக்கும் என்ற உணர்வு தோன்றியது. ஆனாலும் எப்படி கேட்பது என்று புரியாமல் மெதுவாக நெற்றியை வருடினான்.
வேலை அதிகமாக இருப்பதால் சிறிது நேரத்திலேயே அவன் கவனம் மீண்டும் கணினியில் பதிய அவன் முன்னே வந்து நின்றாள் ஜனனி. அவள் அருகில் இருப்பதை அவள் கையில் இருந்த தேநீர் கோப்பையின் நறுமணம் உணர்த்தியது.
மனதில் நினைத்தவுடன் அவள் தேநீருடன் வந்தது ஆச்சரியம் கொடுத்தாலும் எதுவும் காட்டிக் கொள்ளாமல் எடுத்துக் கொண்டான். ஆனால் ஜனாவிற்குள் அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.