நிறைவடைய, தேவி, ரம்யா என டே ஸ்காலர்ஸ் அனைவரும் வீட்டுக்கு செல்ல பேருந்து நிறுத்தத்திற்கு நடந்தனர். வீடு வந்து சேர்ந்தவள் நேரே படுக்கையில் போய் விழுந்தாள். அவளின் காது அடைப்பு இன்னும் சீராகவில்லை. அம்மா வீட்டில் இருக்கும் ட்ராப்ஸ் காதில் விட்டார். அவளும் அயர்ந்து தூங்கிவிட்டாள்.
அவளின் துணிகளைத் துவைக்க எடுக்கப் போன அம்மாவின் சத்தம் கேட்டதும் விழித்தவள் , அம்மா நானே எல்லாத்தையும் துவைக்கிறேன் என்றாள். உனக்குக் களைப்பா இல்லையா, விடு நான் துவைக்கிறேன் என்று அம்மா சொல்ல, எனக்குப் பசிக்குது சாப்பிட எதாச்சும் தாங்க என்று சொல்லவும், முதலில் பல் தேய்ச்சு, குளி, பூரி சுட்டுத் தர்றேன். ரகுவையும் எழுப்பு, நேத்து முழுக்க கிரிக்கெட் ஆடிட்டு வந்து அடிச்சுப் போட்டாப்ல தூங்கிட்டு இருக்கான். அம்மா வெளியேறிய மறுநிமிடம் தினேஷின் சட்டையையும், அவனுக்காக அவள் வாங்கிய குர்தாவையும் மட்டும் உருவி தனது கல்லூரிப் பையில் வைத்துவிட்டாள். துணியை நனைய வைக்கிறியா என்று அம்மா குரல் கேட்கவும், நீங்களே துவைங்கம்மா அலுப்பா இருக்கு என்றாள், இதை அப்பவே சொல்ல வேண்டியதுதானே என்றவாறே அவளின் துணிகளை எடுத்துச் சென்றார்.
மறுநாள் கல்லூரிக்கு சென்றாலும் தூக்கம் தூக்கமாக வந்தது ரம்யாவுக்கு, எதோ சுற்றி சுற்றி மலைப்பாதையில் வந்துகொண்டே இருப்பது போல் இருந்தது. தினேஷ் காலையிலேயே அவளைத் தேடி வர, இருவரின் பயண அனுபவத்தை சொல்லிக் கொண்டிருக்கையில், ரஞ்சன் தினேஷின் முதுகில் தட்டி, கிளாஸ் தொடங்க இன்னும் அஞ்சு நிமிஷம் தான் இருக்கு, டேடாபேஸ் சார் வந்துட்டு இருக்கார். நீ மதியம் வந்து பேசு என்றான். தேங்க்ஸ் மச்சி என்று சிரித்தவாறே கிளம்பினான் தினேஷ். மதியம் ரம்யா தினேஷுக்கு எடுத்த சட்டையைக் கொடுத்தாள். “ரம்யா இது என் டேஸ்டே இல்ல, ஆனால் முதல் தடவையா நீ ஆசையா வாங்கிக் கொடுத்திருக்க! அதனால் கண்டிப்பா ஒரு நாள் போட்டுட்டு வந்து உன்கிட்ட காட்டுறேன்!” என்றான். அவனின் சட்டையை எடுத்துக் கொடுத்தவள், “சாரி, துவைக்க முடில, அம்மா கண்டுபிடிச்சிருவாங்கன்னு அப்படியே பையில் வச்சு எடுத்துட்டு வந்துட்டேன்!” “டூர்ல இதைப் போட்டு இருந்தியா?” தினேஷ் கேட்க, “அப்புறம் என்னவாம். ஊட்டில இருந்தப்ப என்னோட ஸ்வெட்டர் உன் சர்ட் தான்!ஹை அப்படியா, நீ போட்ட என் சட்டை, அப்போ சட்டையெல்லாம் உன் வாசம்! கவிதை எப்படி வருது பாரு! இது கவிதையா? இதான்மா கவிதை. இந்த சட்டையை அப்படியே வச்சுக்கப் போறேன் உன் வாசம் இருக்குமே தினேஷ் சொல்ல, லூஸு லூஸு போய் தோய்ச்சுப் போடு” என்றாள்.