ரம்யாவுக்கும் தினேஷுக்கும் இரண்டாம் ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாகவே இருந்தது. ரம்யா தான் அணியும் உடைக்கேற்ப கைகளில் மினுமினுக்கும் கண்ணாடி அல்லது மெட்டல் வளையல்களை அணிந்து வருவாள். ஒரு முறை அவளின் வளையல்களை அவன் பிடித்துப் பார்க்க, மின்னும் ஜிகினாத் துகள்கள் அவன் கைகளிலும் ஒட்டிவிட்டது. அதை அவன் வகுப்பில் பார்த்த நண்பர்கள் “வளையோசை கலகலவென!” தினேஷுக்கு ஒரே ரொமான்டிக் நேரம் தான் என்று அவனை ஓட்டத் துவங்கினர். நண்பர்களோடு தினேஷ் நின்றுகொண்டிருக்கும் சமயங்களில், அவள் கடந்து செல்கையில் தினேஷின் பெயரைச் சொல்வதும், அவனின் ஊர் பெயரைச் சொல்லி அந்த ஊரின் மருமகள் என்றும் தினேஷின் நண்பர்கள் கிண்டல் செய்தனர். வெளியில் தன்னைக் கிண்டல் செய்வது பிடிக்காத மாதிரி முகத்தை வைத்திருந்தாலும் ரம்யா அதையெல்லாம் உள்ளூர ரசித்தாள்.
அவர்களின் இரண்டாம் செமெஸ்டர் முடிவுகள் வெளியாயின. ரம்யா தான் பெயிலாகி விடுவோம் என்ற டிஸ்க்ரீட் மேத்ஸ் பேப்பரில் பாஸ் ஆகிவிட்ட சந்தோஷத்தில் இருந்தாள். தினேஷும் எல்லா பாடங்களிலும் பாஸ் ஆகி, முதல் செமஸ்டரில் இருந்த அரியர் பேப்பரையும் கிளியர் செய்திருந்தான். ரம்யாவிடம் நண்பர்கள் இதைக் கொண்டாட பார்ட்டி வைப்பதையும் அதில் தான் கலந்து கொள்ளப் போவதையும் தினேஷ் சொல்ல, ரம்யா போக வேண்டாமென்று தடுத்தாள். பிரெண்ட்ஸ் கூப்பிடும் போது நீ சொல்லி நான் வரலன்னு சொல்ல முடியாது. அதுவுமில்லாம இதுநாள் வரை அவங்க கூப்பிடும்போது நான் போயிருக்கேன். இப்போ உனக்காக அதை மாத்திக்க முடியாது. ஏன் எனக்காக எதையும் விட்டுத் தரமாட்டியா? என்றாள் ரம்யா கோபமாக. இதெல்லாம் சின்ன விஷயம், இதை சீரியஸ் ஆக்காத என்று அவளின் பதிலுக்குக் காத்திராமல் கிளம்பிச் சென்றுவிட்டான். அவர்கள் முதல் சண்டை என தனது ரகசிய டைரியில் எழுதி வைத்தாள் ரம்யா. அவன்கூட இனிமே பேசமாட்டேன் அவனைப் பார்க்க மாட்டேன்னு என்று அவன் மேல் கோபமாக இருந்தாள். எல்லாம் அன்று மாலை வரை தான். போனில் தினேஷ் எதோ குழறிய தொனியில் பேசவும், குடித்திருப்பானோ என்று யோசித்தவள், அப்புறம் பேசு என்று வைத்துவிடுகிறாள். அவள் கோபத்தில் நினைத்த மாதிரி அவளால் தினேஷைப் பார்க்காமலோ பேசாமலோ இருக்க முடியாது. “என்ன ரம்யா, உங்க கிளாஸ் பசங்க டூர்ல சரக்கடிச்ச மாதிரி நாங்களும் சரக்கடிக்கப் போறோம்னு நினைச்சியா? எங்களுக்குப் பார்ட்டினா ஹோட்டல்ல போய் நல்லா சாப்பிடணும், சாப்பிட்டுட்டு ஒரு நல்ல மூவி பார்க்கணும் அவ்வளவு தான்!சும்மாவா உன்கிட்ட வம்பிழுக்க தான் முதலில் அப்படிப் பேசினேன்” என்று திரும்பவும் போனில் உண்மையான விஷயத்தை அவன் சொல்லவும் அவள் சமரசம் ஆனாள்.