தொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 15 - முகில் தினகரன்
“என்னப்பா சீனு?...என்ன விஷயம்?...ஏன் இப்படி பதறியடிச்சுக்கிட்டு ஓடி வர்றே?” மூச்சு வாங்கியபடி நின்றவனிடம் நிதானமாய்க் கேட்டார் கஸ்தூரி அய்யா.
“அய்யா...உங்க வீட்டுல குடியிருக்காரே ஒரு சார்?...அவரு...அவரு...” சொல்ல முடியாமல் எச்சில் விழுங்கினான்.
“சொல்லுப்பா...என்ன அவருக்கு?”
“அவரு...அவரு....ஊருக்கு வெளிய மயானத்துக்குக் போற வழில...புதருக்குள்ளார ரத்தக் காயங்களோட கிடக்கறாரு”
“திக்”கென்றானது கஸ்தூரி அய்யாவுக்கு.
நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு பிரமை பிடித்தவள் போல் நின்றாள் வத்சலா.
சட்டென்று சுதாரித்துக் கொண்ட கஸ்தூரி அய்யா, “டேய்....சீனு...இப்படியே போய் கோயில் குருக்கள் வீட்டுல விஷயத்தைச் சொல்லி அவரை அங்க வரச் சொல்லு...நான் நேரா அங்க போறேன்” பனியனுடனேயே ஓடினார்.
சுதாகர்ஜியும், கஸ்தூரி அய்யாவும் சேர்ந்து புதருக்குள் முட்கள் நடுவில் கிடந்த ரவீந்தரை வெளியில் எடுத்துப் போட, யாரோ ஒருவர் தண்ணீர் பாட்டிலைக் கொண்டு வந்து நீட்டி, “மூஞ்சில தண்ணிய அடிங்க” என்றார்.
அவசரமாய் அதை வாங்கி ரவீந்தரின் முகத்தில் “சொத்...சொத்”தென்று அடித்தார் கஸ்தூரி அய்யா.
மெல்லக் கண் விழித்த ரவீந்தர், “மலங்க...மலங்க” விழிக்க,
“என்ன ரவீந்தர் சார்...என்ன நடந்தது?...”கஸ்தூரி அய்யா கேட்டார்.
சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, “தெரியலையே?...”என்றபடி தன் காயங்களைப் பார்த்தான் ரவீந்தர்.
“கதவைச் சாத்திட்டு வீட்டுக்குள்ளார படுத்திருந்த நீங்க எப்படி சார் இங்க வந்தீங்க?” கஸ்தூரி அய்யா ரவீந்தர் மீது ஒட்டியிருந்த சிறு சிறு முட்களை நாசூக்காக எடுத்து விட்டபடியே கேட்டார்.
தரையில் அமர்ந்தபடியே தன்னைச் சுற்றி உள்ளவர்களை ஆராய்ந்தான் ரவீந்தர். “எப்படியும் ஒரு முப்பது பேர் இருப்பாங்க!...இந்த முப்பது பேருக்கு ஒரு தகவலைச் சொன்னா...அது நிச்சயம் முன்னூறு பேருக்குப் போய்ச் சேரும்...அப்ப சொல்லிட வேண்டியதுதான்”என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டவன்,
“சுதாகர்ஜி....என்னை மன்னிச்சிடுங்க...நேத்திக்கு நான் உங்க கோயிலுக்கு வந்து உங்க உப்பாயம்மனை கேவலமாய்ப் பேசினதுக்கு சரியான பாடத்தை அந்த அம்மன் எனக்குக் கற்றுக்