இரண்டாம் வரிசையில் இருக்கை பிடித்து அமர்ந்தோம்.
கொஞ்சம் கொஞ்சமாய் கூட்டம் சேரத் துவங்கி பத்தரை மணி வாக்கில் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படும் தறுவாயில் அரங்கின் முக்கால்வாசி நாற்காலிகள் நிரம்பியிருந்தன.
யார் யாரோ வந்து எதையெதையோ பேசிவிட்டுச் சென்றபின் சிறப்புப் பேச்சாளர் தன் உரையைத் துவக்கினார்.
'யாரும்மா இவரு?” கிசுகிசுப்பான குரலில் அஞ்சலியிடம் கேட்டேன்.
'என்ன மாமா இப்படிக் கேட்டுட்டீங்க?….இவருதான் மாமா 'ஆம்பூர் அனலேந்தி'….நல்ல இலக்கியவாதி….சாட்டையடிப் பேச்சாளர்…பத்திரிக்கைகளிலெல்லாம் கூட இவரு பேரு அடிக்கடி வருமே…”
எனக்கென்னவோ அப்படியொரு பெயரை இதுவரை கேட்டதாகவோ….படித்ததாகவோ சுத்தமாகவே ஞாபகத்திலில்லை.
'என்னத்தைப் பேசிக் கிழிச்சுடப் போறான் இவன்?' என்கிற அலட்சிய மனப்பான்மையோடிருந்த என்னை சற்று கவனிக்க வைத்தது அவரின் பேச்சு.
'ஈவ் டீஸிங்'” என்கிற பெண்களுக்கெதிரான சமூகக் கொடுமை பற்றியும்…அது சம்மந்தப்பட்ட பெண்களையும்…அவளது குடும்பத்தாரையும் உளரீதியாக எந்த அளவிற்குப் பாதிக்கின்றது என்பது பற்றியும்….அக்கொடுமையினால் உயிரிழந்த மாந்தர்களைப்பற்றியும்…அது போன்ற கொடுமைகளை இழைக்கும் இளைஞர்களை…ஆண் வர்க்கத்தினரை எவ்வாறு தண்டிக்க வேண்டும் என்பது பற்றியும் அந்த ஆம்பூர் அனலேந்தி பேச்சில் தெறித்த அனல் என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது. நான் மட்டுமல்ல…மொத்தக் கூட்டமும் அனலேந்தி என்ற பெயருக்குப் பொருத்தமானவர்தான் இவர் என்கிற கருத்தை தம் அதிர வைக்கும் கரவொலியால் தெரிவித்தது.
'நடப்புச் சமூகத்தில நம் கண்ணெதிரே நிகழும் இது போன்ற கொடுமைகளைத் தட்டிக் கேட்கும் மனதைரியம் எல்லோருக்கும் ஏற்பட வேண்டும்….அப்படி ஏற்படாத பட்சத்தில் 'நான் கோழை” என்பதை பகிரங்கமாக அறிவித்து விட்டு முச்சந்தியில் விஷமருந்திச் சாக வேண்டும்….அல்லது தூக்கில் தொங்க வேண்டும்…”என்று அவர் பேசிய போது எழுந்த கைதட்டல் அரங்கின் மேற்கூரையில் மோதி எதிரொலித்தது.
அஞ்சலி பெருமிதமாய்த் திரும்பி என்னைப் பார்க்க நான் புருவத்தை உயர்த்தி ஆமோதித்தேன்
கூட்டம் முடிந்து கிளம்பி பேருந்து நிலையத்தை வந்தடையும் போது மாலை மூன்று மணி ஆகிவிட்டது.