"தனம் என்ன சொல்றாளோ அதையே செய், அவதான் எடுத்து செய்யறா, அவ என்ன சொன்னாலும் சரி!"
சரிம்மா வர சொல்லு, ஆனா இன்னிக்கு தான வந்திருக்கோம், நாளைக்கு அவங்க பொண்ணு பாக்க வரச்சே என்னம்மா செய்ய, கடைலேர்ந்து வாங்கிக்கலாமா?"
"ஆமாம்மா கடைலேர்ந்து வாங்கிக்கலாம், நாளைக்கு நானே வாங்கிட்டு வந்துடறேன், பார்வதிக்கும் வள்ளிக்கும் நல்ல புடவை இருக்காம்மா?"
"இல்லையே!"
"அப்படியா, சரி எப்படியும் நாளைக்கு நான் அந்த பையன்க வீட்ல போய் பார்த்து அவங்க எல்லாம் எப்படி இருக்காங்கன்னு பார்த்துட்டு, அப்படியே போய் புடவை, சுவீட்ஸ் எல்லாம் வாங்கி வந்துடறேன். இல்லேன்னா ஏதாவது ஹோட்டல்ல ஆர்டர் கொடுத்துடலாம் அந்த டைம்க்கு டெலிவரி கொடுத்துடுவாங்க."
"சரி தனம்!"
" அம்மா அதுக்கு முன்னாடி தங்கச்சிங்க கிட்ட கேளுங்க அவங்களுக்கு இதுல இஷ்ட்டமான்னு."
"அவங்களுக்கு இஷ்ட்டமில்லாம எப்படி போகும், எல்லா இஷ்ட்டம்தான்."
"இல்லம்மா, அவங்க அபிப்பிராயத்தை கேக்கணும், அவங்கள கேக்காம எதுவும் செய்யக்கூடாது, நீ கேட்டு சொல்லு."
"சரி!" என்று "வள்ளி,பார்வதி!" என்று கூப்பிட்டார்.
வள்ளியும், பார்வதியும் வந்தார்கள்.
" அடியே, உங்க அக்கா உங்களை கேக்க சொன்னா, அந்த நிக்கத் அம்மா சொன்ன இடம், மாப்ள வீட்டு காரங்க பொண்ணு பாக்க நாளைக்கு வராங்களாம், நீங்க சரின்னு சொன்னா அவங்கள நாளைக்கு வர சொல்லலாம், என்ன சொல்றீங்க ரெண்டு பேரும்?"
அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு "எங்களை எதுக்கும்மா கேக்கற, நீயே முடிவு பண்ணு!" என்று பார்வதி சொல்ல,
"ஆமா, நாங்க என்ன ஒருத்தொருத்தர் மாதிரி படிக்கும் போதே எங்க வாழ்க்கையை முடிவு பண்ணிட்டோமா என்ன? நாங்க பெரியவங்க சொல்ல கேக்கறவங்க, உன் இஷ்டமென்னவோ அதையே செய்!" சொல்லிவிட்டு வள்ளி கிடு கிடுவென்று, உள்ளே சென்று விட்டாள்.
"அவளுக்கு வாய் அதிகம் அது கல்யாணம் பண்ணி எப்படி வாழப் போகுதோ? இதே எனக்கு பெரிய கவலை. ம்.... சரி, அவங்கள நாளைக்கு வர சொல்லு தனம்."என்று தனத்தின் முகத்தை பார்க்காமல் கூறினார், லக்ஷ்மி.