தொடர்கதை - நீயாக நான்!...நானாக நீ - 13 - முகில் தினகரன்
மருத்துவ மனை.
மயக்கத்தில் கிடந்த ராதிகாவின் படுக்கை அருகில் சோக முகத்துடன் நின்று கொண்டிருந்தார் ஏ.சி.தீனதயாள். உடன் காம்ப்ளக்ஸ் ஓனர் சாம்பசிவம்.
கண் மூடிக் கிடக்கும் ராதிகாவின் முகத்தையேஉற்றுப் பார்த்தபடி நின்று கொண்டிருந்த ஏ.சி “ஓ.கே!...லெட்ஸ் கோ!” என்று மெல்லிய குரலில் சொல்லி அங்கிருந்தவர்களையெல்லாம் அந்த அறையிலிருந்து வெளியே கொண்டு வந்தார்.
வெளியே வந்த்தும்
“என்ன சார்...பிரச்சினை மேலும் பூதாகரமா வளர்ந்திடுச்சு!” என்று நடுங்கும் குரலில் சொன்னார் சாம்பசிவம்.
“யெஸ்!..அட்வென்ச்சர் கிடைக்கும்கற ஆசைல போன முகிலன்...அநியாயமா செத்துப் போயிட்டான்!...ப்ச்...நானே ஒரு வகைல அவன் சாவுக்குக் காரணமாயிட்டேன்!” நிஜ வருத்தத்தில் பேசினார் ஏ.சி.
“சார்...இதெல்லாம் எப்படி சார்?”
தோள்களைக் குலுக்கினார் ஏ.சி. “எதுவுமே புரியலை!... இதுக்கு முன்னாடி செத்துப் போனவங்க பாடியாவது முழுசாக் கெடைச்சுது!...ஆனா பாவம் முகிலனோட பாடி மட்டும் சதைத் துணுக்குகளாத்தான் கெடைச்சுது!...வெரி...வெரி...புவர் பாய்!”
சங்கடமான முகபாவத்துடன் தன்னை ஏறிட்டுப் பார்த்த அந்தக் காம்ப்ளக்ஸின் ஓனர் சாம்பசிவத்தை ஆறுதல் படுத்தும் விதமாய்
“டோண்ட் வொரி மிஸ்டர்.சாம்பசிவம்...இந்தப் பெண் ராதிகா கண் விழிச்சதும்...நமக்கு நிறைய விஷயங்கள் தெளிவாயிடும்!..முகிலனோட கம்ப்யூட்டர்ல நிறைய காட்சிகளை இவ பதிவு பண்ணி வெச்சிருக்கா!...ஆனா...அவ மயங்கி விழுந்த போது கம்ப்யூட்டரோட ஒயர்களெல்லாம் மொத்தமாக இழுக்கப்பட்டதால எல்லாமே ஒட்டு மொத்தமா “ஆஃப்” ஆயிடுச்சு!...இனி அவ எழுந்து வந்து...பாஸ்வேர்டை யூஸ் பண்ணி சிஸ்டத்தை “ஆன்” செய்தால்தான்...தொடர்ந்து நாம மூவ் பண்ண முடியும்!...ஸோ..லெட்ஸ் ப்ரே ஃபார் ஹர் ஸ்பீடீ ரெக்கவரி...தட்ஸ் ஆல்!” என்றார்.
*****
ஏ.சி.தீனதயாள் கூறியது போல் எல்லோரும் ராதிகாவிற்காக பிரார்த்தனை செய்ததன் பலனாக அன்று மதியமே அவள் மெல்லக் கண் விழித்தாள்.
ஆனால் விழித்தவள் ஏதோ காணக் கூடாததைக் கண்டு விட்டவள் போல், வீறிட்டலறி மறுபடியும் மயக்கத்திற்கே போனாள்.