பிறகு “விருட்”டென்று நாற்காலியைத் தள்ளிக் கொண்டு எழுந்து வேகமாக வெளியேறினார்.
சீறிப் பாய்ந்த அவரது புல்லட் பதினைந்தே நிமிடங்களில் அவரை வீட்டின் முன் கொண்டு வந்து நிறுத்தியது. தன் வீட்டிற்கு எதிரில் கையில் கட்டை மற்றும் கம்புகளோடு கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்த தீனதயாள்விஷயம் இன்னும் சீரியஸாகப் போய் விட்டதென்பதை உணர்ந்தவராய் அவசர அவசரமாக இறங்கி வந்து
“என்ன...என்ன வேணும் உங்களுக்கு?...எதுக்கு எல்லாரும் இப்படி கும்பலா வந்திருக்கீங்க?” கேட்டார்.
கூட்டத்தின் முன்புறம் நின்று கொண்டிருந்த இளைஞன், “வராம என்ன பண்றது?...உங்க வீட்டு நாய் எங்க குப்பத்தைச் சேர்ந்த ஏழெட்டுக் குழந்தைகளைக் கடிச்சுக் குதறிட்டுது!...யாருமே வீட்டை விட்டு வெளியவே வர முடியலை!”
இதற்குள் இடையில் புகுந்த இன்னொருத்தன்
“நாய் வளர்த்துனா...அதுனால அடுத்தவங்களுக்கு தொந்தரவு இல்லாத மாதிரி வளர்த்தணும்!..இப்படியா ஊர்ல இருக்கறவங்களையெல்லாம் கடிச்சுக் குதறுற மாதிரி வளர்த்துவாங்க?”
“நீங்க போலீஸ்காரர் என்பதற்காக என்ன வேணாலும் பண்ணுவீங்களா?”
“ஒழுங்கா மரியாதையா எங்க குழந்தைகளுக்கு உங்க செலவுல மருத்துவம் பார்த்துக் குடுத்துடுங்க...இல்லேன்னா விவகாரம் பெரிசா வெடிச்சுடும்!”
ஆளாளுக்குப் பொரிந்து தள்ள, வலது கை முஷ்டியால் இடது உள்ளங்கையில் ஓங்கிக் குத்திக் கொண்ட அசிஸ்டெண்ட் கமிஷனர் தீனதயாள்
“மகேஸ்வரி...மகேஸ்வரி...” என்று வீட்டினுள் பார்த்துக் கத்தினார்.
தயங்கியவாறே வெளியே வந்தாள் அவர் மனைவி மகேஸ்வரி. அவள் முதுகுக்குப் பின்னால் மிரண்ட விழிகளுடன் நிவேதிதா.
“ஏண்டி..அது சங்கிலியை அறுத்துக்கிட்டு ஓடுற வரைக்கும் என்ன பண்ணிட்டிருந்தீங்க?”
தாயும், மகளும் பதிலேதும் பேசாது நிற்க,
“ரெண்டு மூணு நாளாவே அது ஒரு மாதிரி உறுமிக்கிட்டிருக்கல்ல?...வெட்னிரரி டாக்டர்கிட்டக் கூட்டிட்டுப் போய் ஊசி போட்டுட்டு வரச் சொன்னேனே?...செஞ்சியா?”
அதற்கும் பதில் வராது போக, நிலைமையைச் சமாளிக்கும் விதமாய், கூட்டத்தைப் பார்த்து, “நீங்கெல்லாம் கலைஞ்சு போங்க!...நான் கார்ப்பரேஷன்ல சொல்லி உடனே ஆட்களை வரச்சொல்லி அதைப் பிடிச்சிட்டுப் போக ஏற்பாடு பண்றேன்” என்றார் தீனதயாள்.
“க்கும்...அதுக்குள்ளார அது...இன்னும் பத்துக் குழந்தைகளைக் குதறிடும்!”