வாய் பேசாமல் தன் கையிலிருந்த கடிதத்தை அவள் கணவரிடம் நீட்டினாள். அவசரமாய் அதை வாங்கிப் படிக்க ஆரம்பித்தார் தீனதயாள்.
“கொஞ்சமும் ஈவு இரக்கமில்லாமல் ஒரு ஐந்தறிவு ஜீவனை அநியாயமாகச் சுட்டுக் கொன்ற மனித மிருகத்துடன் தொடர்ந்து வாழ எனக்கு விருப்பமில்லை. நீங்கள் காவல் துறை அதிகாரி அல்ல காலன் துறை அதிகாரி. அளவுக்கதிகமான அன்பையும் பாசத்தையும் கொட்டி வளர்த்த ஒரு ஜீவன் நம்மை விட்டுப் பிரியும் போது அத்னால் ஏற்படும் வலி எவ்வளவு கொடுமையானது என்பதை என் சீஸரை நீங்கள் கொன்ற போது நான் உணர்ந்து கொண்டேன்!...அந்தச் சோகம் அந்தத் துயரம், எப்படியிருக்கும் என்பதை நீங்களும் உணர வேண்டுமல்லவா?...அதற்காகத்தான் நீங்கள் அன்போடும் பாசத்தோடும் வளர்த்த உங்கள் மகளான நான் உங்களை விட்டுப் பிரிகின்றேன்!...இனி என் வாழ்நாளில் உங்களை எப்போது சந்திக்கவே கூடாது என்கிற எண்ணத்தில்...உங்களை விட்டு விலகிச் செல்கிறேன்!...நான் உங்கள் மகள் என்பதனாலேயே நிச்சயம் தற்கொலை முயற்சியில் ஈடுபட மாட்டேன் என்று நீங்கள் நம்பலாம்!...என்னிடம் படிப்பிருக்கு நாட்டில் எத்தனையோ வேலையிருக்கு ஏதாவது ஒரு நல்ல வேலையைப் பார்த்துக் கொண்டு ஏதாவது ஒரு நல்ல உமன்ஸ் ஹாஸ்டலில் இருந்து கொண்டு என்னுடைய வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தைத் தொடரப் போகிறேன்! - நிவேதிதா.
தன் உத்தியோக செல்வாக்கைப் பயன்படுத்தி நிவேதிதாவைக் கண்டுபிடிக்க தீனதயாள் எடுத்துக் கொண்ட முயற்சிகளெல்லாம் தோல்வியாகவே போய் விட
“அவ ரோஷக்காரிங்க!...நீங்க தலைகீழா நின்னாலும் அவளை உங்களால கண்டுபிடிக்கவே முடியாதுங்க!..” கண்ணீருடன் சொன்ன மனைவியை கவலையுடன் பார்த்தார் தீனதயாள்.
உத்தியோக நிமித்தம் அவர் ஒரு கண்டிப்பான அதிகாரியாய் இருந்தாலும் அவரும் ஒரு மனிதர்தானே?...அவருக்குள்ளும் ஒரு மனசு இருக்கத்தானே செய்யும்?....அதில் வேதனைகளும் கவலைகளும் இருந்ததென்பதை வெளியுலகம் நம்ப மறுக்கலாம் ஆனால் தனிமையில் அவர் சிந்திய கண்ணீர்த்துளிகள் நிச்சயம் நம்பும்!
கமிஷனரிடமிருந்து ரகசிய அழைப்பு வர விரைந்து சென்றார் அசிஸ்டெண்ட் கமிஷனர் தீனதயாள்.
மிகவும் நாசூக்காக கமிஷனர் அறையின் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்று விறைப்பாக சல்யூட் அடித்தார்.
“வெல்கம் மிஸ்டர் தீனதயாள்!” என்று ஆரம்பித்த கமிஷனர் நேரடியாகவே விஷயத்திற்கு வந்தார்.