குலுங்கியது. வாய் குழறியது.
அவற்றையெல்லாம் சமாளித்துக் கொண்டு மிகவும் சிரமப்பட்டு அவள் ஒவ்வொன்றாய்ச் சொல்லத் துவங்கினாள்.
ஆனால் அவள் சொல்லும் தகவல்கள் எதுவும் தெளிவாக இல்லாமல் குழப்பமாகவே இருக்க அவள் இன்னும் முழுதாய்த் தேறவில்லை என்பதை உணர்ந்து கொண்ட ஏ.சி.
“ஓ.கே! ராதிகா...உன்னால அந்தக் கம்ப்யூட்டரை பாஸ்வேர்டு யூஸ் பண்ணி ஓப்பன் பண்ண முடியுமா?ன்னு மட்டும் பாரு” என்று கேட்க
புருவங்களைச் சுருக்கிக் கொண்டு கரு விழிகளை மேலே செருகிக் கொண்டு பாஸ்வேர்டை யோசித்த ராதிகா அது ஞாபத்திற்கு வந்ததும்
“ஓ...தாராளமா ஓப்பன் பண்ணலாமே” என்றாள்.
அவளுடைய அந்த பதில் சிறிய சந்தோஷத்தைக் கொடுக்க, “ஓ.கே.ம்மா...நாளைக்கு நான் இதே டைமுக்கு இங்க வர்றேன்...நாம ரெண்டு பேருமே முகிலனோட இடத்திற்குப் போய் அந்த சிஸ்டத்தை ஓப்பன் பண்ணிப் பார்ப்போம்...என்ன சரியா?”
அவள் “சரி”யென்று தலையாட்ட
“ஓ.கே..ஸீ...யூ...” சொல்லி விட்டு வெளியேறினார் ஏ.சி.தீனதயாள்.
ஏனோ அவரது மனம் தன் மகள் நிவேதிதாவை நினைத்துப் பார்த்தது.
*****
மேஜை மீதிருந்த செல்போன் வைப்ரேஷனில் அதிர, எடுத்துப் பார்த்தார் அசிஸ்டெண்ட் கமிஷனர் தீனதயாள். இணைப்பில் அவரது மகள் நிவேதிதா வர “ம்...சொல்லும்மா?” என்றார்.
“டாடி...டாடி...உடனே புறப்பட்டு வீட்டுக்கு வாங்க டாடி!...இங்க ஒரே பிரச்சினையா இருக்கு டாடி!” அவள் குரலில் தொணித்த பதட்டம் தீனதயாளுவைக் குழப்பத்தில் ஆழ்த்த
“என்னம்மா...என்ன பிரச்சினை?”
“வந்து...நம்ம சீஸர்...சங்கிலியை அறுத்துக்கிட்டு வெளிய ஓடிடுச்சு டாடி!”
“ஓ...காட்!” என்றபடி நெற்றியைத் தேய்த்தார். இரண்டு மூன்று தினங்களாகவே அவர்கள் விட்டு நாய் சீஸர் உணவே உண்ணாமல் வித்தியாசமான முறையில் உறுமிக் கொண்டிருப்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அதை வெட்னிரரி டாக்டரிடம் அழைத்துப் போகச் சொல்லி தன் மனையிடம் சொல்லி விட்டுத்தான் வந்திருந்தார்.
“தெருவுல ஏழெட்டு பேரைக் கடிச்சிடுச்சு டாடி...யாராலுமே அதைப் பிடிக்க முடியலை டாடி!” நிவேதிதா அழுகையினோடே சொன்னாள்.
“ஒருவேளை அதற்கு வெறி பிடித்திருக்குமோ?” என்கிற சந்தேகம் மனத்தை உறுத்த இணைப்பைத் துண்டித்து விட்டு சில விநாடிகள் யோசித்தார்.