தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 11 - முகில் தினகரன்
அந்த மண்டபம் களை கட்டியிருந்தது.
தனசேகரின் தந்தை பொன்னுரங்கமும், மல்லிகாவின் தந்தை ராமலிங்க பூபதியும் செல்வச் செழிப்பில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல, என்பதை ஊருக்குப் பறைசாற்றும் அந்த திருமண நிகழ்ச்சிக்காக பணத்தை வாரி இறைத்திருந்தனர்.
மொத்த ஊரையும் அழைத்து, மண்டபத்தைச் சுற்றி மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு பந்தலமைத்து, மாலையில் இன்னிசைக் கச்சேரி, இரவில் விடிய விடிய கலை நிகழ்ச்சிகள் என அமர்க்களப்படுத்தியிருந்தனர்.
ஆனால், மணமகன் தனசேகரின் முகம் மட்டும் சோபையிழந்து கிடந்தது. தாயிடமும் தந்தையிடமும் மாற்றி மாற்றி விசாரித்தான்.
“முரளி ரெண்டு நாளா என் கண்ணில் படலை!...என்னாச்சு அவனுக்கு?...ஏன் அவன் மண்டபத்துக்கு வரலை?...நீங்க யாராவது அவனை ஏதாச்சும் சொல்லிக் காயப்படுத்திட்டிங்களா?”
“டேய்...நீ படற பாட்டை பார்த்து நாங்களே அவன் வீட்டுக்கு ஒரு ஆளை அனுப்பி விசாரிச்சிட்டோம்!...அவங்க வீடு பூட்டிக் கிடக்காம்!...குடும்பத்தோட எங்கியோ வெளியூரு போயிட்டாங்களாம்” என்றாள் அவன் தாய் சுந்தரி.
“இல்லை நான் நம்ப மாட்டேன்!..என் கிட்டே சொல்லாம அவன் போக மாட்டான்!...ஏதோ சதி நடந்திருக்கு” தவித்தான் தனசேகர்.
“அட...ஊர்ல யாரோ பங்காளி வீட்டுல சாவு விழுந்திடுச்சாம்!...அந்த அசுப காரியத்தை கல்யாண மாப்பிள்ளையான உன் கிட்ட சொல்லக் கூடாது!ன்னு சொல்லாமலே கிளம்பிப் போயிட்டாங்களாம்” பொய்யை சரமாரியாகச் சொன்னாள் சுந்தரி.
“எப்ப திரும்பி வருவாங்க?”ன்னு விசாரிச்சீங்களா?”
“ம்...விசாரிக்காமல் இருப்போமா?...எப்படியும் முகூர்த்தத்துக்கு வந்திடுவானாம்” என்றாள் சுந்தரி.
மறுநாள் காலை, மண மேடையில் அமர்ந்திருந்த தனசேகரின் கண்கள் கூட்டத்தில் முரளியைத் தேடின.
“மாப்பிள்ளை சாமி...நான் சொல்ற மந்திரங்களைத் திருப்பிச் சொல்லுங்கோ” அந்த புரோகிதர் சொல்ல, “யோவ்...கொஞ்சம் சும்மாயிருய்யா” என்று அதட்டி அவரை வாயடைத்தான்.
“பொண்ணை வரச் சொல்லுங்கோ...பொண்ணை வரச் சொல்லுங்கோ” யாரோ கூவ,
மணமகள் அறையிலிருந்து தேவதை போன்ற அலங்காரத்தோடு வந்தாள் மல்லிகா. அவள் மேனியில் குடியேறியிருந்த தங்க நகைகளை ஊர் மக்கள் வாயைப் பிளந்து கொண்டு பார்த்தனர்.