கூட்டமே மணமகளையும், அவளுடைய அபரிமிதமான ஒப்பனையைக் கண்டு மெய் மறந்திருந்த வேளையில், அதை ரசிக்க வேண்டிய மாப்பிள்ளையோ தன் நண்பனைத் தேடிக் கொண்டிருந்தான்.
“கெட்டி மேளம்!...கெட்டி மேளம்” என்று ஐயர் சொல்ல,
தவுலின் சத்தம் மண்டபத்தை அதிர வைக்க,
அட்சதையைத் தயாராய் வைத்துக் கொண்டு காத்திருந்தது கூட்டம்.
ஆனால், தாலியைக் கையில் வாங்கிய தனசேகர், அதை மணமகள் கழுத்தில் கட்டாமல், பின்புறமாய் நின்று கொண்டிருந்த தன் தாயாரை அழைத்தான்.
“அம்மா...கொஞ்சம் இப்படி வாம்மா”
பற்களைக் கடித்துக் கொண்டே வந்தவள், “என்னப்பா..என்ன வேணும்?” கடுமையான குரலில் கேட்டாள்.
“முரளி வரலையா?”
“வந்திடுவேன்”ன்னு சொன்னான்!...ஆனா இதுவரை வரலை!...அவனுக்கு என்ன பிரச்சினையோ?...அவனுக்காக பார்த்திட்டிருந்தா....நல்ல நேரம் போயிடும் மொதல்ல நீ தாலியைக் கட்டு அப்புறம் பார்த்துக்கலாம்!” என்றாள் சுந்தரி.
கெட்டி மேளம் “டும்...டும்....டும்...” என்று முன்னை விட அதிக சப்தத்துடன் முழங்க...அது தனசேகரின் காதுகளில் “முரளி...முரளி...முரளி” என்றே கேட்டது.
அய்யர், “மாங்கல்யம் தந்துனா...”என்று கூவ, அது “முரளிதரன் வந்தானா?” என்று ஒலித்தது.
அட்சதைகள் அதுவாகவே வந்து விழ,
“மாங்கல்யத்தைக் கட்டுங்கோ” அய்யர் உசுப்ப,
என்ன செய்கிறோம்?...என்பதே தெரியாமல் மல்லிகாவின் கழுத்தில் மாங்கல்யத்தைக் கட்டினான் தனசேகர்.
கட்டி முடித்த பின்னும் அவன் பார்வை முரளியைத்தான் தேடியது. “ம்ஹ்ஹும்...அவன் வரலை...அவனை யாரோ...என்னமோ பண்ணிட்டாங்க!...அதனாலதான் அவன் வரலை!...இல்லேன்னா அவனாவது...என் கல்யாணத்துக்கு வராமல் இருப்பதாவது?”.
தனசேகரின் கோபம் மல்லிகாவின் வீட்டிலிருந்த அந்தக் கிழவியின் மீது பாய்ந்தது. “அந்தக் கிழவிதான் அன்னிக்கு தேவையில்லாத பழைய கதைகளைப் பேசி முரளி மனசைக் காயப்படுத்தினா....இப்பவும் அவதான்....அதே மாதிரி எதையாவது பண்ணி வெச்சிருப்பா”
திருமணத்திற்கு வந்திருந்தோரெல்லாம் தாங்கள் கொண்டு வந்திருந்த பரிசுப் பொருட்களை மணமக்களிடம் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்ட போது, தனசேகரின் முகத்தில்