புன்னகைக்கு பதில் கோபம்தான் அப்பியிருந்தது.
“இந்த அமளியெல்லாம் அடங்கட்டும்...அப்புறம் வெச்சுக்கறேன் இவங்களை?” உள்ளுக்குள் பொருமிக் கொண்டேயிருந்தான்.
மணமகளின் குடும்பத்தார் ஒன்றாய் நின்று புகைப்படம் எடுக்க வந்த போது, அந்தக் கிழவியை எரிப்பது போல் பார்த்து விட்டு, வேண்டுமென்றே, “எனக்கு டாய்லெட் போகணும்” என்று சொல்லி விட்டு நழுவினான்.
மறுபடியொருமுறை அவர்கள் வந்த போது அந்தக் கிழவி இல்லை. எல்லோரும் புகைப்படம் எடுக்க நின்ற போது, “ஆத்தா எங்கே போச்சு?...யாராவது போய் ஆத்தாவைக் கூட்டிட்டு வாங்க” என்று யாரோ சொல்ல,
“ஆத்தாவும் வேண்டாம்...அதிரசமும் வேண்டாம்!...மொதல்ல போட்டோவை எடுப்பா” என்றான் தனசேகர் குரூர சிரிப்போடு.
மாப்பிள்ளையே சொன்ன பிறகு மறுக்க முடியாமல் அந்த போட்டோகிராபர் போட்டோ எடுத்து முடிக்க, வேக வேகமாய் ஓடி வந்தாள் அந்தக் கிழவி.
அவளைக் கண்டதும், “அதோ ஆத்தா வந்திட்டாங்க மறுபடியும் எடுக்கலாம்” என்று அதே யாரோ சொல்ல, “விருட்”டென்று எழுந்து மணமகன் அறையை நோக்கி நடந்தான் தனசேகர்.
தொடரும்