தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 17 - முகில் தினகரன்
சிறிது தூரம் சென்ற பின் ரியர் வியூ கண்ணாடியைப் பார்த்த தங்கவேலு குழப்பமானார். “என்னது அந்தப் பையன் மறுபடியும் லாரியைத் துரத்திக்கிட்டு வர்றானே?”
லாரியை ஓரங்கட்டி, அவசரமாய்க் குதித்திறங்கினார். “என்னப்பா?...என்னாச்சு?”
அவர் கேட்டதைக் கூட காதில் வாங்கிக் கொள்ளாமல், லாரி கேபினின் இடது புறக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான் தனசேகர்.
“இந்தாப்பா...என்ன?...என்ன பண்றே?” கேட்டவாறே டிரைவர் இருக்கைக்கு தாவினார் தங்கவேலு.
உள்ளே,
ஸ்டியரிங்கிற்கு மேலே மாட்டப்பட்டிருந்த டிரான்ஸ்போர்ட் ஓனரின் மகன் கோகுலின் புகைப்படத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி அமர்ந்திருந்தான் தனசேகர்.
“என்னப்பா?...ஏன்..இந்தப் போட்டோவையே உற்றுப் பார்த்தபடி உட்கார்ந்திருக்கே?” தங்கவேலு கேட்க,
சுய நினைவிற்கு வந்த தனசேகர், “சார்...யாரு சார் இந்தப் போட்டோவுல இருக்கறது?...எதுக்கு சார் இதுக்கு மாலை போட்டிருக்கீங்க?...” கரகரத்த குரலில் கேட்டான்.
“இது...இந்த லாரியோட ஓனர் மகன் கோகுல் போட்டோ!....அவன் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இறந்திட்டான்..அதான் மாலை போட்டிருக்கோம்” என்றார் தங்கவேலு.
“இல்லை சார்...இது என் ஃபிரெண்ட் முரளியோட போட்டோ சார்!...”என்று தனசேகர் அவசரமாய்ச் சொல்ல,
வியப்பானார் தங்கவேலு. “தம்பி...உனக்கு முரளியைத் தெரியுமா?”
“தெரியுமாவா?...சார் அவன் என் உயிர் நண்பன் சார்!...ஒரு...ஆறேழு மாசத்துக்கு முன்னாடி...ஒரு சின்னப் பிரச்சினைல...மனசொடிஞ்சு போய்...இந்த ஊரை விட்டே போயிட்டான் சார்” சொல்லி விட்டு தனசேகர் கண் கலங்க, அந்த நட்பின் வீரியத்தைப் புரிந்து கொண்டார் தங்கவேலு.
“என்ன பிரச்சினை?...உங்களுக்குள்ளே ஏதாவது சண்டையா?” நிதானமாய்க் கேட்டார் தங்கவேலு.