“அப்ப மட்டும் பெரியவங்க ஏத்துக்குவாங்களா?”
“ஹா....ஹா...ஹா...”என்று வாய் விட்டுச் சிரிச்ச தனசேகர், “சார்...அன்னிக்கு அந்த முரளியை விரட்டின அதே பெரியவங்க இப்ப அந்த முரளியை வலை போட்டுத் தேடிட்டிருக்காங்க!...திரும்பவும் அவனை இதே ஊருக்குக் கூட்டிட்டு வர படாத பாடு படறாங்க!...இதான் சார் எங்கள் நட்போட சக்தி” பெருமையாய்ச் சொன்னான்.
தலையை மேலும் கீழும் ஆட்டி அதை ஆமோதித்த தங்கவேலு, “அது செரி...முரளி கிடைச்சானா?” கேட்டார்.
“ப்ச்...இதுவரைக்கும் அவன் எங்கே இருக்கான்?ன்னு ஒரு சின்ன தடயம் கூடக் கிடைக்கலை சார்” என்ற தனசேகர், “இந்தப் போட்டோவில் இருக்கற உங்க முதலாளி மகன் அப்படியே என் நண்பன் முரளியோட ஜெராக்ஸ் காபி மாதிரியே இருக்கார் சார்” என்றான்.
“தம்பி....என்னோட பர்ஸை...என்னைத் துரத்திட்டு வந்து நீ குடுத்தப்ப நான் ஒண்ணு சொன்னேனே ஞாபகமிருக்கா?”
“என்ன...என்ன சார் சொன்னிங்க?” கண்களைச் சுருக்கிக் கொண்டு கேட்டான் தனசேகர்.
“நீ செஞ்ச இந்த உதவிக்கு நிச்சயம் நான் கைம்மாறு செய்வேன்”ன்னு சொன்னேனே?...அதுக்கான நேரம் இப்பவே வந்திடுச்சு தம்பி” என்று புன்னகையுடன் தங்கவேலு சொல்ல,
கீழுதட்டைக் கடித்துக் கொண்டு தங்கவேலுவின் முகத்தையே பார்த்தான் தனசேகர்.
“ஆமாம் தம்பி!...நான் உன் முரளியை உன்னோடு சேர்த்து வைக்கப் போறேன்!...” என்றார் தங்கவேலு.
அதைக் கேட்டதும் பௌர்ணமி நிலவு போல் முகம் மலர்ந்த தனசேகர், “சார்...அப்படின்னா முரளி எங்கிருக்கான்?னு உங்களுக்குத் தெரியுமா?” அவசரமாய்க் கேட்டான்.
“ம்ஹ்ஹும்...இப்ப எதுவும் சொல்ல மாட்டேன்...! ஆனா...முரளியை சீக்கிரத்திலேயே உன் கண்ணில் காட்டுவேன்”
“சார்...அவன் எந்த ஊரில் இருக்கா?...அதையாவது சொல்லுங்க சார்” கெஞ்சினான் தனசேகர்.