தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 24 - முகில் தினகரன்
அவசர சிகிச்சைப் பிரிவின் வராண்டாவில் நின்று கொண்டிருந்த தனசேகரின் பெற்றோரும், ராமலிங்க பூபதி குடும்பத்தாரும் இன்ஸ்பெக்டருடன் நடந்து வரும் சொக்குவைப் பார்த்ததும் குழப்பமாயினர்.
“இவன் எதுக்கு இங்க வர்றான்?” ராமலிங்க பூபதி கேட்டே விட்டார்.
“தெரியலையே?...ஒரு வேளை தனசேகர்கிட்ட வாக்குமூலம் வாங்க வர்றாங்களோ?”என்றார் பொன்னுரங்கம்.
“அப்படின்னா நம்ம பையன் மரண வாக்குமூலம் குடுக்கற நிலைமையிலா இருக்கான்?” கேட்டு விட்டுக் “கோ”வென்று கதறினாள் சுந்தரி.
அவர்களுக்கு பின்புறமிருந்த வேறொரு வழியாக வந்து திடீரென அங்கு பிரசன்னமாயினர் தங்கவேலுவும், முரளியும்.
“த பாருங்க யாரும் சொக்குவைப் பார்த்ததும் ஆத்திரமடைய வேண்டாம்...சண்டை போட வேண்டாம்!..இப்போதைக்கு அவன் ஒருத்தன்தான் நமக்குக் கிடைச்சிருக்கற ஒரே “ஏஒன்” நெகடிவ் ரத்தக்காரன்...அவன் ரத்தம் குடுத்தால்தான் நம்ம தனசேகர் பிழைப்பான்...” என்றான் முரளி சன்னக் குரலில்.
அதற்குள் அவர்களை நெருங்கி விட்ட இன்ஸ்பெக்டர், “என்னப்பா முரளி...இவங்க எல்லோர்கிட்டேயும் சொல்லிட்டியா?” கேட்டார்.
“சொல்லிட்டேன் சார்...நாம சொக்குவை உள்ளார அனுப்பிடலாம்”
அப்போது அவர்களைக் கடந்து சென்ற நர்ஸிடம், “சிஸ்டர்... “ஏஒன்” நெகடிவ் ரத்தத்துக்கு ஆள் வந்தாச்சு” என்று முரளி சொல்ல,
அவள் சொக்குவை அவசர சிகிச்சைப் பிரிவு அறைக்குள் அழைத்துச் சென்றாள்.