அவர்கள் சென்றவுடன் இன்ஸ்பெக்டர் பேசினார்.
“த பாருங்க...அந்த சொக்கு தன்னோட தவறை உணர்ந்து..அவனாகவே வந்து சரணடைஞ்சிட்டான்!...அதே மாதிரி தன்னோட தவறுக்குப் பிராயச்சித்தமா...தான் குத்திய நபருக்கு தானே ரத்தம் குடுக்கவும் வந்திட்டான்!..அதனால...நீங்க யாரும் தயவு செய்து அவன் மேல் விரோதம் காட்ட வேண்டாம்!...கேஸும் குடுக்க வேண்டாம்!...ஒரு குற்றவாளியை தண்டனை குடுத்து திருத்த முடியாது!...அப்படியே திருந்தினாலும் அது ஒரு தற்காலிகமாய்த்தான் இருக்குமே தவிர நிரந்தமாய் இருக்காது!...அதே நேரம்...அவன் தவறை அவனே உணரும்படி செய்து, அவனால் உண்டான பாதிப்புக்களை அமைதியாய் நாம் ஜீரணிக்கும் போது அவன் மனசாட்சி நிச்சயம் அவனைக் குத்திக் கிழிக்கும்....அதன் மூலம் அவன் திருந்தும் போது...அது ஒரு நிரந்தரமானதாகவும் இருக்கும்” என்றார்.
எல்லோரும் அதை ஏற்றுக் கொள்வது போல் அமைதியாய்த் தலையசைத்தனர்.
சரியாக முக்கால் மணி நேரத்திற்குப் பிறகு,
அவசர சிகிசைப் பிரிவின் கதவு திறக்கப்பட்டது. சொக்குவை ஒரு நர்ஸ் கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு வந்தாள். “இவரைக் கூட்டிட்டுப் போய்...நல்லா காத்து வர்ற இடத்துல உட்கார வைங்க!...ஆப்பிள் ஜீஸோ...ஆரஞ்சு ஜூஸோ வாங்கிட்டு வந்து குடுங்க” என்றாள்.
பாய்ந்து சென்ற முரளி, சொக்குவின் தோள்களைப் பற்றி மெல்ல நடக்க வைத்து, சற்றுத் தள்ளியிருந்த மரத்தடி பெஞ்சில் அமர வைத்தான்.
“நான் போய் ஆப்பிள் ஜூஸ் வாங்கிட்டு வ்ர்றேன்” தங்கவேலு ஓடினார்.
பொன்னுரங்கத்திடம் வந்த இன்ஸ்பெக்டர், “நீங்கதானே குத்துப்பட்ட பையனோட அப்பா?” கேட்டார்.
அவர் “ஆமாம்” என்று தலையாட்ட, “நீங்க போய் அந்த சொக்கு கிட்டே நன்றி சொல்லுங்க” என்றார்.