தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 28 - முகில் தினகரன்
மறுநாள், தனசேகரை எதேச்சையாக சந்தித்த முரளி, முந்தின தினம் நடந்தவற்றை அவனிடம் சொல்ல,
முரளியின் கைகளைப் பற்றி “நன்றி” தெரிவித்தான் தனசேகர்.
“என்னப்பா...உன்னைக் கத்தியால் குத்தியவனுக்கு உதவி செய்ததற்கு நன்றி சொல்றே?” முரளி தமாஷாய்க் கேட்க,
“இல்லை முரளி!...தெரிஞ்சோ...தெரியாமலோ...நான் அவனுக்கு ஒரு கெடுதல் செஞ்சிட்டேன்” சொல்லும் போது தனசேகரின் முகத்தில் வாட்டம் தெரிந்தது.
“அன் மாமாவும் அத்தையும்....சின்ன வயசிலிருந்தே அவன் மனதில் “மல்லிகா உனக்குத்தான்!”னு சொல்லி வளர்த்திருக்காங்க!...அது அவன் மனசுல பசுமரத்தாணி போல் ஆழப் பதிஞ்சிடுச்சு” தனசேகர் பக்கத்து மரத்தின் இலையைப் பறித்து அதை முகர்ந்து பார்த்தவாறே சொல்ல,
“சரி...அப்புறம் ஏன் மாறிட்டாங்க?”
“சொக்குவோட அப்பா இருந்த வரைக்கும் அவன் நல்லாத்தான் இருந்தான்!...ரெண்டு குடும்பமும் ஒற்றுமையா...ஒண்ணுக்கொண்ணு அனுசரனையாய்த்தான் இருந்திருக்காங்க!...அவங்க அப்பா செத்ததும்...அவனைக் கண்டிக்க ஆள் இல்லாமல் போச்சு!...கெட்ட சகவாசங்களால்...கெட்ட பழக்கங்கள் பரிச்சயம்!...அந்தக் கெட்ட பழக்கங்கள் ஒட்டிக்கிட்டதால் அடிதடிப் பழக்கம் அதுவா வந்திடுச்சு!...அப்புறம்...ஜெயில்...குடி...ன்னு அவன் தறிகெட்டுப் போக, அத்தை குடும்பம் அவனைக் கொஞ்சம் கொஞ்சமாய்த் தவிர்த்து...கடைசியில் மொத்தமாய் வெட்டியே விட்டது!...ஆனாலும் அவன் மல்லிகாவின் மீதிருந்த அன்பு...மாறவில்லை!...” என்றான் தனசேகர்.
“வெறும் அன்பிருந்தா போதுமா சேகர்?...அவளை அடையத் தகுதியும் வேணுமல்லவா?” தன் நண்பனுக்கு ஆதரவாய்ப் பேசினான் முரளி.