வெளியில் சென்றிருந்த முரளி மாலை ஆறரை மணி ஆகியும் வராததால், “ஏய்...வசந்தி...ஒரு சின்ன வேலை செய்யேண்டி” என்றாள்.
வீட்டிற்கு வெளியே முல்லைக் கொடியின் மொக்குகளைப் பறித்துக் கொண்டிருந்த வசந்தி அங்கிருந்தே கேட்டாள், “என்ன வேலை”
“வந்து...கடை வீதி வரைக்கும் போயி...எண்ணைக் கடைக்காரருக்கு...இந்த ரூபாயைக் குடுத்திட்டு வந்திடேன்”
“ஏன்...அதை இன்னிக்கே கொண்டு போய்க் குடுக்கணுமா?...நாளைக்கு அண்ணன் கிட்டே குடுத்தனுப்பினா போதாதா?” பதில் சொன்னாள் வசந்தி.
“அடியேய்...முந்தா நாளு...எண்ணை வாங்கும் போது...கொஞ்சம் பணம் பத்தலை!...அதை அவருகிட்ட சொன்னப்ப?.. “அதனாலென்ன...எங்க போயிடப் போகுது?... நாளைக்குக் கொண்டு வந்து குடுத்திடுங்க!....இப்ப எண்ணையை எடுத்திட்டுப் போங்க!”ன்னு எவ்வளவு பெருந்தன்மையாய்ச் சொன்னார் தெரியுமா!...நியாயபடி பார்த்தா நேத்திக்கே நான் குடுத்தனுப்பியிருக்கணும்!...மறந்திட்டேன்!...அதான் இன்னிக்கு...இப்பவே போகச் சொல்றேன்” கொஞ்சம் கெஞ்சலாய்ச் சொன்னாள் ராக்கம்மா.
தாய் சொல்லியதில் இருந்த நியாயத்தைப் புரிந்து கொண்ட வசந்தி, பறித்த வரைக்கும் போதுமென, மீதமிருந்த மொக்குகளைக் கொடியிலேயே விட்டு விட்டு வீட்டிற்குள் வந்தாள்.
“குடும்மா”
தாய் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு, வாசலுக்கு வந்து செருப்பணிந்து கொண்டு தெருவில் இறங்கினாள்.
வேக வேகமாய் நடந்து, அரை மணி நேரத்தில் கடை வீதியை அடைந்து, எண்ணைக் கடைக்காரருக்கு பணத்தைக் கொடுத்து விட்டுத் திரும்பியவளுக்கு அப்போதுதான் உறைத்தது.