“அடக் கடவுளே!...மணி ஏழே கால் ஆயிடுச்சு...பொழுது வேற இருட்டிடுச்சு!...வரும் போது கொஞ்சம் வெளிச்சம் இருந்திச்சு...அதனால...குறுக்கு வழில வந்திட்டோம்..இப்ப அதுல போக முடியாதே?...என்ன பண்றது?” யோசித்தாள்.
அண்ணாந்து வானத்தைப் பார்த்தாள் இன்னும் பகல் வெளிச்சம் மிச்சமிருக்க, சுற்றும் முற்றும் பார்த்தாள். பார்வைக்குப் போதுமான வெளிச்சம் பரவலாயிருக்க, “இந்த வெளிச்சத்திலேயே போயிடலாம் போலத்தான் இருக்கு!...”தனக்குத் தானே சொல்லிக் கொண்டு, குருட்டு தைரியத்தில் குறுக்கு வழியில் நடை போட ஆரம்பித்தாள்.
சிறிது தூரம்தான் நடந்திருப்பாள். சூழலை அடர் இருட்டு மொத்தமாய் ஆக்கிரமித்துக் கொள்ள, லேசான அச்சம் அவளுக்குள் முளைத்தது. “பேசாமல் மெயின் ரோட்டிலேயே போயிருக்கலாமோ?”
நாய்க்கர் தோட்டத்து வேலியோரம் ஓடும் ஒற்றையடிப் பாதை மங்கலாய்த்தான் தெரிந்தது. இருந்தாலும், தன் பார்வையைக் கூராக்கிக் கொண்டு நடந்தவள் பத்திரமாய் தார் ரோட்டை அடைந்தாள். கால்கள் வேக வேகமாய் ஓடின.
அந்த வழியில் உள்ள பஞ்சு மில்லின் உயரச் சுற்றுச் சுவர்களுக்குக் கீழே கள்ளச் சாராய வியாபாரம் களை கட்டியிருந்தது. குடிமகன்கள் உலகத்தை மறந்து சந்தோஷமாய் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும், ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டுமிருந்தனர்.
அதைப் பார்த்ததும் “திக்”கென்றானது வசந்திக்கு. “கடவுளே...தெரியாத்தனமா இதுல வந்திட்டேனே?”
தன்னை ஒரு புதருக்குப் பின்னால் மறைத்துக் கொண்டு அங்குள்ள நிலவரத்தை ஆராய்ந்தாள். “ஆஹா...சுத்தமா பத்துப் பேருக்கும் மேலே இருப்பானுக போலிருக்கே?...எல்லோரும் குடி போதைல வேற இருக்கானுக!...நான் போனா அவ்வளவுதான்...என்னைப் பிச்சுத் தின்னுடுவானுக!...இப்ப என்ன பண்றது...அவனுகளைக் கடந்துதான் போயாகணும்!” பொறியில் சிக்கிக் கொண்ட எலி போல் தவித்தாள்.
நேரம் ஓடிக் கொண்டேயிருக்க, அவள் பயம் கூடிக் கொண்டே போனது.