தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 29 - முகில் தினகரன்
புயலாய்ப் புறப்பட்டவள், அந்தக் குடிகாரர்கள் மத்தியில் புகுந்து தலை தெறிக்க ஓடினாள். அங்கு என்ன நடக்கின்றது? என்பதை அந்தக் குடிகாரர்கள் புரிந்து கொண்டு சுதாரிப்பதற்கு முன், அவர்களைக் கடந்து சென்றே விட்டாள்.
ஓட்டத்தின் வேகத்தை மட்டுப்படுத்திக் கொண்டு, அப்பாடா” என்று நெஞ்சில் கையை வைத்தவளை திடுக்கிட வைக்கும் விதமாய் பக்கத்துப் புதருக்குள்ளிருந்து வெளியே வந்தனர் இரண்டு குடிகாரர்கள்.
“டேய்...சாராயத்துக்குக் கடிச்சுக்கறதுக்கு எதுவுமில்லை!”ன்னு சொன்னியே இந்தா...உனக்காகவே ஒரு அல்வாத் துண்டு வந்திருக்கு” என்றான் ஒருவன்.
“அடடா...அல்வாத் துண்டு இடுப்பு...உன் இடுப்பு...அழகாய்ப் பத்திக்கிச்சு நெருப்பு....தூள் கெளப்பு” பாடினான் இன்னொருத்தன்.
வசந்தியின் உடல் “கிடு...கிடு”வென்று நடுங்கியது.
“என்னடா பார்த்துக்கிட்டு நிக்கறே?...அள்ளுடா அல்வாத் துண்டை” என்று ஒருவன் சொல்ல, இன்னொருவன் அவளை அப்படியே அலாக்கத் தூக்கிக் கொண்டு புதருக்குப் பின்னால் சென்றான்.
வசந்தி அடித் தொண்டையில் அலறினாள்.
கற்பைக் காப்பாற்றிக் கொள்ளக் கதறினாள்.
அந்தக் காமுகர்களுக்கு அவளின் கத்தல் ஒரு உந்து விசை போலிருக்க, ஆடினார்கள். பாடினார்கள்.
இருபத்தியொரு வயதில் தன் வாழ்க்கையின் இறுதி அத்தியாயத்தை எட்டி விட்டதை உணர்ந்த வசந்தி, அவர்களிடமிருந்து தப்பிக்கும் முயற்சியாய் திமிறினாள். துள்ளினாள்.
ஒரு புலியிடம் சிக்கினாலே புள்ளி மான் சிதறிப் போகும், ஆனால், இங்கே இரு