ஒரு கட்டத்தில் ஏதோவொரு வீட்டினுள் நுழைவது போன்ற கடைசி உணர்வோடு வசந்தியின் இமைகள் மூடிக் கொள்ள, முழு மயக்கத்திற்குப் போனாள்.
****
தெருவில் நின்று கத்திக் கொண்டிருந்தான் முரளி, “உனக்கெல்லாம் அறிவே இல்லையா?....யாரைக் கேட்டு நீ தங்கச்சியை அனுப்பினே?....நான்தான் “சாயந்திரம் வந்து நானே கொண்டு போய்க் குடுக்கறேன்!”னு சொன்னேன் அல்ல?...அதுக்குள்ளார உனக்கு என்ன அவசரம்?”
“இல்லைடா...ஏற்கனவே ஒரு நாள் லேட்டாயிடுச்சு...அந்த எண்ணைக் கடைக்காரர் தப்பா நினைச்சிடக் கூடாது!ன்னுதான் அனுப்பினேன்!...அதுவும் சாயந்திரம்....ஆறரை மணிக்கு....வெளிச்சம் இருக்கும் போதுதான் அனுப்பினேன்!” ராக்கம்மா மகனிடம் சமாளித்தாள்.
“பாரு...இப்ப மணி பத்துக்கும் ஆச்சு!...இதுவரைக்கும் போனவ திரும்பி வரலை!...எங்கே போய்த் தேடறது?” பதட்டமாய் சொன்னான்.
“எதுக்கும் கடை வீதி வரைக்கும் இன்னொரு தடவை போய்ப் பார்ததிட்டு வாப்பா” கெஞ்சினாள் ராக்கம்மா.
“க்கும்..இதுவரைக்கும் ரெண்டு தடவை போய்ப் பார்த்திட்டு வந்திட்டேன்!...அங்க யாருமே இல்லை!...கடைக்காரங்கெல்லாம் ஒன்பது மணிக்கே போயிட்டாங்களாம்!...எனக்கென்னமோ அவ குறுக்கு வழில திரும்பி வரும் போது ஏதாச்சும் ஆகியிருக்குமோ?ன்னு சந்தேகமாயிருக்கு” என்று முரளி சொல்ல,
பக்கத்து வீட்டுக்காரர் வலிய வந்தார், “தம்பி...ஆளுக்கொரு டார்ச் லைட் எடுத்திட்டுப் போய் அந்த வழியாகவும் தேடிப் பார்த்திட்டு வருவோம் தம்பி”
ஐந்து பேர் கையில் டார்ச்சுடன் கிளம்பினர்.