“என்னங்க காலைல ஒண்ணு மதியம் ஒண்ணு ராத்திரிக்கு ஒண்ணுனு சரியாதான் எடுத்து வெச்சிருக்கேன்” என்றார்
தாத்தா கடுப்பாக முறைக்க அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் பாட்டி இல்லை.
அதைவிட கொடுமை தாத்தா பெட்டி பஞ்சத்தில் அடிபட்டது போல இரண்டே இரண்டு பேண்டு சட்டை மட்டும் இருந்தது.
அதைபற்றி தாத்தா வினவ “நீங்கதான் ஒரே சட்டைய ஒரு வாரம் போடுவீங்க . . உங்களுக்கு இது போதும் . . லக்கேஜ் குறைச்சலா இருக்கிறதுதான் நல்லது” என்றுவிட்டார்.
“எல்லா இந்த தனுஷால” என தாத்தா முணுமுணுக்க
“எதுக்கு என் பேரனை திட்டுறீங்க . . அவனுக்கு என் மேல இருக்கிற அக்கறை உங்களுக்கு இருக்கா?”சண்டை கோழியாய் மாற
“என்னமோ செய்” என சென்றுவிட்டார்.
“இந்த புடவைக்கு எந்த பிளவுஸ் சரியா இருக்கும் சாந்தி?” என கையில் புடவை பிளவுசுடன் தன் மருமகளை தேடியபடி சென்றுவிட்டார்.
பெருமூச்சை விடுவதை தவிர தாத்தாவால் வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை.
தனுஷ் விரைவாக வீட்டுக்கு வந்தான். அவர்களுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்தான். தாத்தா சந்தேக கண்ணோடு அவனை பார்த்தார்.
தனுஷ் அதை கவனிக்காத மாதிரி திரிந்தான். இனிக்க இனிக்க பாட்டியிடம் பேசினான். “பாட்டி இன்னும் ஒரு வாரம் கூட இருந்துட்டு வாங்க . . தாத்தாவ சம்மதிக்க வைக்க வேண்டியது உங்க சாமார்த்தியம். அங்க ரிசாட்ல எல்லா ஏற்பாடும் செய்திருக்கேன். கவலையில்ல” என்றான்.