தொடர்கதை - இன்ஸ்பெக்டர் தேன் - 06 - தேன்மொழி
கேஸ் ஃபைல் - 01 - குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்...!
தென்றல்வாணனின் நேரடி பார்வை தாக்குதல் ரமணியை தொந்தரவு செய்திருக்க வேண்டும். அமர்ந்திருந்த நாற்காலியில் காரணம் இல்லாமலே அசைந்தார்.
அவரின் மாற்றத்தை குறிப்பெடுத்துக் கொண்டே, பார்வையை முத்துக்குமார் பக்கம் மாற்றினான் தேன்.
“சாரி, உங்க கிட்ட என்ன சொல்லிட்டு இருந்தேன், முத்துக்குமார்? போன் வந்ததுல மறந்துட்டேன்!”
“எங்க வீட்டில பொருட்கள் எல்லாம் எப்படி கன்னாபின்னான்னு கலைஞ்சு கிடந்ததுன்னு சொல்லிட்டு இருந்தீங்க!”
“எஸ், டேபிள் மேல இருந்த பேப்பர், ஃபிளவர் வேஸ் இதெல்லாம் கூட கீழே விழுந்திருந்தது, அதுதான் கொஞ்சம் குழப்பிடுச்சு!”
"இதுல என்ன சார் குழப்பம்? எல்லாம் அந்த கொலைக்காரங்க செஞ்சதா தான் இருக்கணும்..." என்றார் ரமணி.
"யெஸ் யெஸ், இருக்கலாம்! உங்க வீட்டில் திருட்டுப் போன மொத்த பொருட்களின் மதிப்பு பல லட்சம் பெறும்?"
"யெஸ் இன்ஸ்பெக்டர்... அதெல்லாம் போனால் கூட பரவாயில்லையே, என்னோட மனைவியை ஒன்னும் செய்யாமல் விட்டுட்டு போயிருந்திருக்கலாம்..." பேசும் போதே கண்ணில் இருந்து வழிந்த நீரை கைகுட்டையால் துடைத்துக் கொண்டான் முத்துக்குமார்.
"ம்ம்ம்ம்ம்ம்ம்... திருட வந்தவங்க பணம் நகைகளை கண்டுப்பிடிக்க எந்த சிரமமும் பட்டதா தெரியலை. உங்க லாக்கரை, பீரோவை எல்லாம் உடைச்சு திறந்து அவங்களுக்கு வேண்டியதை எடுத்திருக்காங்க... ஆனால் கலைஞ்சு கிடந்தப் பொருள் தான் என்னை குழப்புது."
"என்ன குழப்பம் சார்? திருடனுங்க எல்லாத்தையும் அரேஞ் செய்தா வச்சுட்டு போவாங்க?"