தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 09 - யாஷ்
“உன் சொந்த வீடு போல நினைச்சுக்கோ ப்பா. உனக்கு என்ன வேணும்னாலும் தயங்காம கேளு!” என்றாள் ஹரிணி.
பதிலாக கூச்சத்துடன் தலை ஆட்டினான் ஆதித்யா.
அவனின் கூச்ச சுபாவத்தை புரிந்துக் கொள்ள முடிந்ததால் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்காமல், “அக்ஷரா சலான்ல இருந்து வர இரண்டு மணி நேரமாவது ஆகும். நீ அதுக்குள்ளே உன் பொருள் எல்லாம் எடுத்து அடுக்கி வை. ஏதாவது வேணும்னா என்னைக் கூப்பிடு!” என சொல்லி அந்த அறையில் இருந்து வந்தாள் ஹரிணி.
அவளுக்காக காத்துக் கொண்டிருந்தவனாக அவள் வந்ததும் கிளம்ப தயாரானான் விவேக்.
“அப்போ அக்ஷ்ராக்கு எல்லாம் செட்டில்ட் தான அம்மா? இனிமேல் நீங்க பார்துப்பீங்க. ரைட், நான் கிளம்புறேன்!” என்றான்.
“பத்திரமா போ விவேக். நேரத்துக்கு சாப்பிடு.”
“சரிம்மா,” என ஹரிணிக்கு பதில் சொன்னாலும் விவேக் லிவிங் ரூமில் இருந்த அலங்கார கண்ணாடியில் தன் தலை முடியை நெற்றி ஓரம் கலைத்து கலைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்ன பண்ற விவேக்? நல்லால இருக்க முடியை எதுக்கு கலைக்குற?”
“எனக்கு வழுக்கை வருதுன்னு க்ரூப்ல பசங்க கிண்டல் செய்றாங்கம்மா! அதான் பார்க்கிறேன்.”
“வழுக்கை எல்லாம் இல்லை, நல்லா தான் இருக்கு. உன் பிரென்ட்ஸ்க்கு பொறாமையா இருக்கா இருக்கும்.”
“எனக்காக பொய் தானே சொல்றீங்க?”