மாட்டிக்கிட்டு இருப்பான்?”
“அதான் என்னை மாட்டி விட்டுட்டார் போலருக்கு...!”
அப்போது அங்கே ஓடி வந்தாள் ஷாலினி.
“அப்பா... நீங்களும் அம்மாவும் லவ் செய்து கல்யாணம் செய்துகிட்டீங்களாப்பா? பாட்டி சொன்னாங்க... எனக்கு அம்மாவும் சொல்லலை, நீங்களும் சொல்லலை... பேட்...”
தென்றல்வாணன் ஷாலினியின் கேள்வி புரிந்து பதில் சொல்வதற்கு முன்பாகவே,
“ஷாலினி கண்ணா... உனக்கு ஐஸ் க்ரீம் எடுத்து வச்சிருக்கேன் பாரு...” என பேத்தியை அழைத்தாள் குமுதா.
“வரேன் பாட்டி...” என்று ஷாலினி ஓடி விட, தேன் மாமியாரின் பக்கம் சூடான பார்வை ஒன்றை தந்தான்.
இதெல்லாம் சத்யாவை போலவே என்னையும் ஒன்றும் செய்து விடாது எனும் ரேஞ்சிற்கு அமைதியாக அவனை பார்த்த குமுதா,
“உங்க காதல் ரொம்ப உயர்வானது... புனிதமானது ஆச்சே... அதான் உங்க பொண்ணு கிட்டேயும் சொல்லி இருப்பீங்கன்னு நினைச்சேன்...” என்றாள் குத்தலாக...
குமுதா எய்த அம்பு மிக சரியாக சென்று தேன்-ஐ தாக்கியது! திகைத்துப் போய் அமைதியாக இருந்தான் அவன்...! குமுதாவின் பக்கத்திலேயே நின்றிருந்த சத்யா கணவன் பக்கம் ஒரு பார்வை பதித்து விட்டு, உதடுகளை இறுக மூடிக் கொண்டு அமைதியாக நின்றிருந்தாள்.
விஜயநாதன் தென்றல்வாணனின் தோளில் ஆதரவாக தட்டினார்.
“ஷாலினி கிட்ட சொல்லக் கூடாதுன்னு நினைக்கலை மாமா. அவ இன்னும் கொஞ்சம் வளரட்டும்னு நினைச்சேன்.”