பலமான நட்பு இன்னும் பலப்பட்டு இருந்த்து...
எதிர்பார்ப்பு இல்லாத உண்மையான நட்பு இருவரிடமும் இருந்தால், எந்த விதமான சச்சரவுகள், தவறான புரிதல்கள், மன வேற்றுமைகள் வந்தாலும் மலையாக நிற்கும் நட்பை அசைக்காது...
அப்படி ஒரு நட்பு கிடைப்பது மிக மிக அபூர்வம் தான்... அந்த விதத்தில் தான் அதிர்ஷ்டசாலி என்று மஞ்சுவிற்கு தோன்றியது...
அவளும் அமுதாவும் இப்போதெல்லாம் அடிக்கடி பேசிக் கொண்டார்கள்... அந்த பேச்சில் பழைய சிநேகிதமும், புதிய அன்யோன்யமும் கலந்து இருந்தது...!
இருவரும் தவறாமல் மாறி மாறி மனோஜையும், சரவணனையும் பேச்சில் இழுத்து கேலி செய்துக் கொண்டார்கள்...
அமுதாவுடனான நட்பை விட பல ஆயிரம் மடங்கு மனோஜுடனான மஞ்சுவின் திருமண வாழ்வு மேம்பட்டு இருந்தது... மனோஜ் அவள் மீது அன்பை மழையாக வாரி இறைத்தான்...
அவனைப் பற்றி நினைக்கும் போதே மஞ்சுவினுள் இனிமை பரவியது...
இருந்தாலும், அவளையும் மீறி நடந்தவற்றை நினைக்கும் போதெல்லாம் மனோஜை எளிதாக மன்னித்து விட்டாளா என்ற கேள்வி ஒன்று தோன்றும்... உடனடியாக அதை மறுத்து விடுவாள் மஞ்சு...
அவளுக்கு மனோஜ் அவள் மீது வைத்திருக்கும் அன்பை பற்றி தெரியும்... அதன் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் இருந்தது...
அதனால் அவனை ஒருத்தடவை மன்னிக்கலாம் தவறில்லை...
ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மஞ்சுவின் இதழ்களில் பெரிய புன்னகை உதயமானது...