தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 12 - பிந்து வினோத்
12. உன்னருகே நான் இருந்தால்...
அன்று மாலை, உமா, மது மற்றும் திருமண நாளிற்காக விடுப்பு எடுத்திருந்த நிரஞ்சன் மூவரும் கேஷுவலாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். அலுவலகத்தில் இருந்து திரும்பிய விவேக்கும் அவர்களின் பேச்சில் கலந்துக் கொண்டான். பொதுவான விஷயங்கள் பற்றி நான்குப் பேரும் பேசிக் கொண்டிருக்கும் போது, அப்போது தான் நினைவு வந்ததுப் போல்,
“அட மது சொல்ல மறந்திட்டேனே, உன் பாரதி மேடத்தையும், பவித்ரா மேடத்தையும் இன்னைக்கு காலையிலே மால்ல பார்த்தோம்,” என்றாள் உமா!
“அப்படியா அண்ணி? நானும் பேசாமல் உங்க கூட வந்திருக்கலாம், அப்போ அவங்க ரெண்டுப் பேரையும் நானும் மீட் செய்திருக்கலாம்...” என்றாள் மது மெல்லிய வருத்தத்துடன்.
“இதுக்கு எதுக்கு கவலைப் படுற? நீ வந்திருந்தாலும் கூட பவித்ராவோட தான் பேசி இருக்க முடியும்... உன்னோட பாரதி மேடம் கல்யாணத்துக்காக ரொம்ப சீரியஸா அலையன்ஸ் பார்த்துட்டு இருக்காங்க... இன்னைக்கு அவங்க வந்திருந்ததும் அது விஷயமா தான்..”
“ஓ!!! அப்படியா?? பாரதி மேடம் என் கிட்டே இதைப் பத்தி எல்லாம் சொல்லவே இல்லையே...” என்றாள் மது ஆச்சர்யத்துடன்!
“ஹேய் வாலு, இது உனக்கே ஓவரா தெரியலை?” என்றான் நிரஞ்சன் கேலியாக.
அண்ணனின் செல்ல அதட்டலைக் கேட்டு சிரித்த மது,
“இல்லை அண்ணா, சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்... காலேஜில, என்னுடைய கவுன்சிலர் பாரதி மேடம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஜெனரல் கவுன்சிலிங் செஷன்ல பொதுவா லைஃப் பார்ட்னர் எப்படி செலெக்ட் செய்யணும்னு ஒரு பெரிய லெக்சரே கொடுத்தாங்க... ஆனால் அவங்க விஷயம் சொல்லவே இல்லையே... அதான் யோசிக்குறேன்...” என்றாள்!
“பரவாயில்லையே, காலேஜில இதெல்லாம் சொல்லித் தராங்களா? நல்ல விஷயம் தான்...” என்று தங்கையிடம் பேசியப்படி தம்பி பக்கம் பார்த்த நிரஞ்சன்,