தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
02. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
தோழிகள் மூவரும் வீணாவின் வீட்டை அடைந்தப் போது, வீணாவின் குழந்தை ரோஷினி, அவள் பாட்டி லக்ஷ்மியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். தன் அம்மாவை பார்த்த உடன் பாட்டியை விட்டு விட்டு ஓடி வந்தாள்.
"பார்த்தீயா வீணா இவளை... இவ்வளவு நேரம் பாட்டி பாட்டின்னு செல்லம் கொஞ்சிட்டு, உன்னைப் பார்த்த உடனேயே விட்டுட்டு ஓடிப் போறாள்?" என செல்லமாகப் புகார் செய்தாள் லக்ஷ்மி.
கீதா வீணாவின் கையில் இருந்த ரோஷினியின் கன்னங்களை செல்லமாக கிள்ளி விட்டு,
"வேற என்ன ஆன்ட்டி? ஓடி வரலன்னா அம்மா கோவிச்சுப்பாங்களே... நல்லா அம்மாவை புரிஞ்சு வச்சிருக்கிறாள்!" என்று தோழியை மறைமுகமாக கேலி செய்தாள்!
வீணாவிற்கு பொதுவாக பொஸஸிவ்னஸ் (possessiveness) அதிகம். அதை தான் கீதா குறிப்பிடுகிறாள் என்பதை புரிந்து கொண்டதற்கு அடையாளமாகப் புன்னைகைத்தப் போதும், மருமகளை விட்டுக் கொடுக்காமல் தாங்கிப் பேசினார் வீணாவின் அத்தை,
"பின்னே, அம்மாவை விட வேற யாரு முக்கியம்...?"
மூன்று பேரும் சிரித்து விட்டு, ரோஷினியிடம் சிறிது நேரம் செல்லம் கொஞ்சினார்கள். வீணாவிற்கு பிறந்த நாளிற்கு வாங்கி வந்திருந்தப் பரிசுகளை கொடுத்து விட்டு, மற்றவர்கள் அவளுக்கு வாங்கி தந்திருத்த பரிசுகளைப் பார்த்தார்கள். பின்னர் மதிய உணவை ஒரு வெட்டு வெட்டி விட்டு, தூங்கிப் போயிருந்த ரோஷினியை அவள் பாட்டியிடம் கொடுத்து விட்டு, வீணாவின் அறைக்குச் சென்று அரட்டை அடிக்க ஆரம்பித்தார்கள். மூன்று தோழிகளுமே அந்த வீட்டில் அனைவருக்கும் பரிச்சயமானவர்கள் என்பதால், இது யாருக்கும் புதியதாக இருக்கவில்லை!
"வீணா, உங்க வீட்டு குக் செம சூப்பர்... எப்படி தான் இந்த சாப்பாட்டை டெய்லி சாப்பிட்டும் இப்படி உடம்பை மெயின்டெயின் பண்றீயோ?" என்றாள் கீதா