இதுவரை விடியோ சேட்டில் மட்டும் அக்ஷ்ராவை பார்த்திருந்த சான்வியும் உடனடியாக அவளை அடையாளம் தெரிந்துக் கொண்டாள். அக்ஷரா எக்ஸிட் பாதையில் இருந்து வெளி வர காத்திருந்து அவள் அருகே சென்றாள்.
"அக்ஷரா! வெல்கம் டு சென்னை. நீ வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம். நான் சான்வி!"
அக்ஷரா பதில் சொல்லாது சான்வியைப் பார்த்து விட்டு அவள் பின்னே இருந்த ஆதித்யாவைப் பார்த்து முறைத்தாள்.
"உனக்கு ஆதி மேல இருக்க கோபம் ரொம்ப நியாயமானது அக்ஷரா. நான் உன் சைட் தான். அவனை திட்டினா நான் தடுக்கவே மாட்டேன்!" சான்வி தம்பியை பார்த்து முறைத்துக் கொண்டு சொன்னாள்!
"எனக்கு எதுக்குக்கா அந்த வேலை எல்லாம்? நான் ஜாக்ருதியை மீட் செய்ய கிடைச்சிருக்கும் வாய்ப்பை மிஸ் செய்ய வேண்டாம்னு வந்தேன். அவ்வளவு தான்!" அக்ஷரா ஆதித்யாவை கண்டுக்கொள்ளாது சான்வியிடம் இப்போது பேசினாள்.
"சாரி அக்ஷரா!" ஆதித்யா திரும்பவும் அவளிடம் மன்னிப்புக் கேட்டான்.
அக்ஷ்ராவின் பின்னேஏ நடந்து வந்திருந்த விவேக் அவர்கள் மூவரும் நின்றிருந்த இடத்திற்கு சிறிய இடைவெளி விட்டு நின்றிருந்தான். அவர்கள் மூன்றுப் பேரும் பேச்சு மும்முரத்தில் அவனை கவனிக்க தவறி இருந்தார்கள்.
விவேக்கின் கண்கள் இப்போது சான்வி மீது மட்டும் இருந்தது. விடியோவில் நிழலாய் பார்த்திருப்பவளை முதல் தடவையாக நேரில் சந்திக்கிறான்.
ஸ்கூலில் இருந்து நேராக ஏர்போர்ட் வந்திருந்தாள் போலும்! அவளின் முடி கலைந்து காற்றில் கொஞ்சமாக பறந்துக் கொண்டிருந்தது. ஆனால் கட்டி இருந்த சேலை மிகவும் கச்சிதமாக கட்டப் பட்டிருந்தது. பிரவுன் நிற சேலையின் நிறம் அவனுக்கு வித்தியாசமாக இருந்தது.