தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 21 - பிந்து வினோத்
21. என்னை தோற்றுவிட்டு வெட்கத்தில் தலை குனிந்தேன்...
அனைவருமாக பேசி, டிரைவரை ரமேஷின் காரை வழக்கமாக அவர்கள் ரிப்பேர் செய்யும் நிறுவன துணையுடன் சரி செய்ய சொல்வது என்றும், மற்றவர்கள் அனைவரும் ஒன்றாக மகாபலிபுரம் செல்வது என்றும் முடிவு செய்தார்கள். பவித்ரா சந்தேகமாக ரமேஷை பார்க்கவும், அவன் அவள் சந்தேகம் நிஜம் தான் என்பது போல் கண்களால் சைகை செய்தான். பவித்ராவின் முகத்தில் பெருமிதம் தோன்றியது. மனைவியின் தோழியை தங்கையாக நினைத்து இத்தனையும் செய்யும் கணவனை மனதினுள் மெச்சினாள். அந்த சிந்தனையுடன், பாரதி பக்கம் பார்த்தவள், அவள் முகம் தெளிவில்லாது இருப்பதைக் கண்டாள். அவள் பக்கம் சென்றவள்,
"என்ன பாரு இது? இப்படி மூஞ்சியை தூக்கி வச்சுக்கிட்டு? நாங்க எல்லோரும் தானே வரோம் அப்புறம் என்ன? வா காரிலே விவேக்கோட அம்மா இருக்காங்களாம் பேசிட்டு வரலாம்... "
"நான் பேசியாச்சு பவி..."
"ஒ! அப்போ சரி... நான் அத்தையையும் அந்த சின்ன வாலையும் வர சொல்றேன்..."
அனைவரும் மற்ற போக்குவரத்திற்கு இடைஞ்சல் இல்லாது சற்றே தள்ளி நிறுத்தி வைக்க பட்டிருந்த அந்த டவேரா நோக்கி சென்றனர்.
மற்ற குழப்பங்களுக்கிடையில், விவேக் தன் பக்கம் பார்க்கவும் இல்லை, ஒரு புன்னகை கூட இல்லையே என்று எண்ணியபடி நடந்தாள் பாரதி. முன்னே நடந்து சென்றுக் கொண்டிருந்த அவளின் நடை அழகை ரசித்த படி, ரமேஷ் மற்றும் நிரஞ்சனுடன் பின்னே வந்தான் விவேக்.
காரில், அறிமுக படலம் நடந்து முடியவும், பத்து பேர் வரை செல்ல கூடிய அந்த வண்டியில், இரண்டு குழந்தைகளுக்கு வசதியாக இருக்கும் வகையில் அனைவரும் அமர்ந்தனர். பாரதி, பவித்ரா, உமா ஒன்றாக அமர, கமலா, கற்பகம், மது இன்னொரு பக்கம் அமர்ந்தனர்.
காரை எடுக்க டிரைவர் சீட்டில் அமர்ந்த விவேக், மறக்காமல், அவனுக்கு நேர் பின்னே அமர்ந்திருந்த பாரதி கார் கண்ணாடியில் தெரியுமாறு அதை திருப்பி வைத்து விட்டு காரை கிளப்பினான்.